தமிழின் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரோடான நட்பு மிக இனியது. நம் கை பிடித்து அழைத்துப்போவது. இன்று அவர் பருவுடலாய் இல்லை. ஆனால், அவரின் எழுத்துகளும் எண்ணங்களும் நம்மோடு உலவுகின்றன.
அவர் எழுதிய கடிதங்கள் தனி வகையிலானவை. புதிதாக எழுத வருவோர்க்கு ஆர்வத்தையும் தொடர் தூண்டலையும் தருபவை. பெரும்பாலும் அஞ்சலட்டையை அழகுபடுத்தியவை அவரின் கடிதங்கள். என் போன்ற எத்தனையோ பேருக்கு அவைதான் தமிழில் வாசிக்க, எழுத வழிகாட்டிய பாடப்புத்தகங்கள்.


