ஆய்தம் : அலகு பெறும் அழகு


     எனது முனைவர் பட்டத்திற்கான நேமிநாத ஆய்வு குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் கேட்டவர்கள் கொஞ்சம் வியப்புடனும் மனசுக்குள் கேள்வியுடனும் என்னைப் பார்ப்பது உண்டு. ‘நேமிநாதமா? அப்படியொரு இலக்கண நூலா? நான் கேள்விப்பட்டதில்லையே…’ என்றவர்களும் ‘இலக்கிய வரலாறுகளில் சின்னூல் எனச் சொல்வார்களே அதுவா?’ என்று ஒரு நூற்பெயராக மட்டுமே தாம் கேள்விப்பட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.

 வெறும் 99 வெண்பாக்களைக் கொண்ட குட்டியூண்டு நூலில் இவன்போய் என்ன ஆய்வைச் செய்யப்போகிறான் எனச் சந்தேகித்தவர்களும் உண்டு. பிரபல எழுத்தாளரும் நண்பருமான பெருமாள் முருகனின் வழிகாட்டுதலில் வெறும் தகவலாக மட்டுமே பெரும்பாலோரால் அறியப்பட்டுள்ள நேமிநாதத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றாயிற்று.

           ஆய்வின்போது நேமிநாத வெண்பாக்களின் சீர் பிரிப்பு பற்றிப் பார்க்க வேண்டி வந்தது. ஆய்த எழுத்து வரும் இடங்களில் நூல் முழுதும் ஒருபடித்தான தன்மை இல்லாத சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. ஆய்த எழுத்தைச் சில இடங்களில் உயிர்போலவும் சில இடங்களில் மெய்போலவும் கொண்டால் மட்டுமே தளை சிதையாமல் சீர்பெறுகிறது என்பதைக் காண முடிந்தது. இதுபோல் வேறெந்த நூலிலாவது வருகிறதா எனத் தேடியபோது திருக்குறளில் ஆய்த எழுத்து தனி ஒலியனாக வருகிறது என்னும் மொழியியல் செய்தி நினைவுக்கு வந்தது. 
         கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாகத் தேடிய நிலையில் 5 குறள்களில் ஆய்தம் உயிரெழுத்தைப் போல அலகு பெறுவதை அறிய முடிந்தது. இவ்வாறு வெண்பாக்களில் பயின்று வரும் ஆய்த எழுத்தின் யாப்பியல் நிலைமை பற்றி மனசுக்குள் ஒருவிதமான கேள்வி இருந்துகொண்டே இருந்தது. வெண்டளையில் ஆய்த எழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதோடு சரி. வேலை நெருக்கடியில் அது மறந்து போய்விட்டது. 
     ஆய்த எழுத்தைப் பற்றி தெ.பொ.மீ (தமிழ் மொழி வரலாறு), செ.வை. சண்முகம் (எழுத்திலக்கணக் கோட்பாடு),     சு. சக்திவேல் (தமிழ் மொழி வரலாறு), பெ. சுயம்பு (தமிழ் மொழி அமைப்பும் வரலாறும்) முதலானோர் நூல்களில் மொழியியல் நோக்கில் தொகுத்துக் கூறப்படுகிறது. எனது குறிப்புகளை மீண்டும் பார்த்தபோது ஆய்தம் அலகு பெறுதல்  பற்றி யாப்பியல் நோக்கில் எழுதத் தோன்றியது.

மரபிலக்கணம் தாண்டி
      ஆய்தமும் ஒற்றெழுத்துகளும் அளபெடுக்கும்போது மட்டுமே அலகு பெறும்.  பிற இடங்களில் அலகு பெறாது என்பதே யாப்பிலக்கண நூல்கள் அனைத்தும் வெளிப்படுத்தும் இலக்கணமாகும்¹. இதற்கு மாறாக அளபெடை தோன்றாத இடத்திலும் ஆய்தம் உயிரெழுத்தாக வந்து அலகு பெறுகிறது. 
      ஆய்த எழுத்து செய்யுளில் இருவகை மதிப்பைப் பெறுகிறது. பெரும்பாலான இடங்களில் ஒற்றெழுத்துப் போலவும் சில இடங்களில் உயிரெழுத்துப் போலவும் கையாளப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வரும் வெண்பாக்களில் இவ்வாறான வருகையை வெளிப்படையாகக் காண முடிகிறது. யாப்பிலக்கண நூல்களின் இலக்கணத்திற்கு மாறாக உள்ள இப்போக்கு ஆராயத்தக்கது.

தரவுகள்
              எனக்குக் கிடைத்த தரவுகள் அடிப்படையில் திருக்குறள் 5,   நாலடியார் 2, பழமொழி 2, நந்திக் கலம்பகம் 1, முதலாழ்வார் மூவர்  இயற்பா 2, யாப்பருங்கல விருத்தி - நலிபு வண்ணத்திற்கான சான்று நூற்பா, நீதிநெறி விளக்கம் 1, நேமிநாதம் 7 ஆகிய 21 இடங்களில் ஆய்தம் உயிரெழுத்தாக அலகு பெறுகிறது2.  
           மேற்கண்ட இடங்களில் ஆய்தத்தை ஒற்றெழுத்தாகக் கொண்டால் மா முன் நேர் ஆகி நேர் ஒன்று ஆசிரியத்தளை ஆகி விடும். ஆய்தத்தை உயிரெழுத்தாகக் கொண்டால் மட்டுமே வெண்டளை சிதையாமல் நிற்கும். வெண்டளையில் நம் எடுகோளைச் சரிபார்ப்பது எளிது என்பதால் வெண்டளையில் அமைந்த செய்யுள்கள் மட்டும் தரவுகளாகக் கொள்ளப்பட்டன. 

பொருந்தாத சிந்தனை
         ஒற்றை ஆய்தம் அலகு பெறாது என யாப்பிலக்கண நூல்கள் விதித்தாலும் தரவுகள் அதற்கு மாறாகவும் இருப்பதற்குப் பின்வருமாறு சிந்தனைகள் தோன்றக் கூடும்.
மெய்யெழுத்துகள் புள்ளி பெறும் என இலக்கண நூல்கள் கூறினாலும் ஓலைச் சுவடிகளில் புள்ளி வைத்தால் ஓலை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இல்லாமலேயே எழுதப்பட்டதும் உண்டு. இதனால், ஏடெழுதுவோர் காலப்போக்கில் இரட்டை ஆய்தம் இடம்பெற்ற இடங்களில் ஒற்றை ஆய்தத்தை மட்டும் எழுதி இருக்கலாம்.
ஆய்தத்திற்கு ஈடான ஓசை பெற்ற அல்லது வரிவடிவம் பெற்ற ஏதோ ஓர் எழுத்து ஆய்தமாகக் காலப்போக்கில் பாட பேதமாக எழுதப்பட்டிருக்கலாம். 
தமிழ் மொழி, வரிவடிவத்தை விட ஒலி வடிவத்திற்கு முக்கியத்துவம் தரும் மொழி என்பதால் ஆய்தத்தின் வரிவடிவம் குறித்து அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை எனலாம். 
     ‘ஓலைச் சுவடிகளில் காணப்பெறும் வழக்குகளை உண்மையெனவே கொள்வோமாயின் சில சமயங்களில் குகரமாக எழுதப்பட்ட ஆய்தம் தனியொலியாகக் கொள்ளப்பட்டது எனக் கொள்ள வேண்டும்.
சான்று:      அஃதை   அகுதை  (புறம். 347 -5)
பிற்காலத்தில் சுவடிகளில் - பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் கூட - ஆய்தத்தின் மூன்று புள்ளிகளும் இணைக்கப்பட்டுக் கூ என்னும் வடிவத்தைத் தரும் வகையில் எழுதப்பட்டது. எனவே, இம்மாறுதல் சங்க காலத்திலேயே ஏற்பட்டதா என்பதைப் பற்றி நிச்சயமாக ஒன்றும் சொல்ல முடியாது. தம் காலத்திய முறைக்கு ஏற்ப எழுதும் பழக்கத்தின் விளைவாகவும் இது இருக்கலாம்’ என்பார் தெ.பொ.மீ.³
           தெ.பொ.மீ காட்டும் சான்றை நாம் எல்லா இடத்திற்கும் பொருந்துவதாகக் கொள்ள முடியாது. மேலே காட்டிய தரவுகளில் இடம்பெற்ற அஃது, அஃறிணை ஆகிய இரண்டு சொற்களில் வரும் ஆய்தம் எல்லா நூல்களிலும் குகரமாக எழுதப்பட்டதாகப் பொதுமைப்படுத்த முடியாது. 
      தொல்காப்பியத்தில் அஃது என்பது அஃறிணை ஒன்றன்பால் சுட்டுப் பெயராகவும் அஃறிணை என்பது உயர்திணை அல்லாத திணையைக் குறிக்கும் பெயராகவும்  ஆளப்படுகிறது.
           திருக்குறள் 363, 414 ஆகியவற்றில் வரும் ஆய்த எழுத்துகள் ‘து’ என்பதன் பாடபேதமாகக் காளிங்கர் கொண்டுள்ளதால் திருக்குறளில் ஏனைய இடங்களில் அலகு பெற்று வரும் ஆய்த எழுத்துகளும்  பாடபேதம்தான் என்பது நா. முத்துநிலவனின் கருத்தாகும்4. 
      அனைத்து ‘அஃது’களையும் ‘அது’வெனக் கொள்ள முடியாது. மேற்காண் தரவுகளில் இடம்பெற்றுள்ள ‘அஃது’களை மீள்பார்வை செய்தால் இது தெளிவாகும். மேலும் அஃறிணை, வெஃகா ஆகிய சொற்களில் வரும் ஆய்தத்தைப் பாடபேதமாகக் கொள்ள முடியாது. 
    நன்னூல் எழுத்ததிகார(60) உரையில் ‘….. ஆய்தம் உயிர்போல அலகு பெற்றும் மெய்போலப் பெறாதும் ஒருபுடையொத்து அவற்றினிடயே சார்ந்து வருதலானும், ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தாற் பிறத்தலானும் சார்பெழுத்தாயினவெனக் கொள்க’ எனச் சங்கர நமச்சிவாயப் புலவரும் காரணங்கூறிச் சென்றனர்’ என்கிறார் க. வெள்ளை வாரணனார்5.
  பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் ஆய்தம் உயிரெழுத்துப் போல அலகு பெறுதலைக் குறிப்பிட்டாலும் இங்கு அவர் யாப்பிலக்கண நோக்கில் ஆய்தத்தின் தனித்த நிலையை விவரித்ததாகக் கொள்ள முடியவில்லை;  ஆய்தம் சார்பெழுத்தானதற்குக் காரணம் கூறிச் சென்றதாகவே வெள்ளை வாரணனார் கருதுகிறார். 
     ஆக ஆய்தம் அலகு பெறுவதை ஏற்றுக் கொள்ளும் சங்கர நமச்சிவாயர் அது புதிய மாற்றம் என்பதை அடையாளப்படுத்தாமல் சார்பெழுத்துகளுள் ஒன்றாகப் பழையதில் சேர்த்துவிட்டார். 

பழமையின் தாக்குதல்
      ஆம், பழையதிலிருந்து கிளைத்து வளர்ந்த புதிய இலக்கிய இலக்கணப் போக்கினை அவ்வளவு லேசில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் இலேசுக் கோட்பாடுதான். (இதிலிருந்துதான் லேசு என்னும் சொல்லாட்சியும் வந்ததோ என்னவோ.) 
        இலக்கணத்தைப் பதிவுசெய்து வைக்கச் செய்யுள் நடையைப் பின்பற்றும் நூலாசிரியன் செய்யுளின் யாப்பு கெடாதிருக்கவும் அதை முடித்து வைக்கவும் ஒருசில நேரங்களில் இடம் நிரப்பிகளாக மிகைச்சொற்களைச் சேர்ப்பது உண்டு. இதற்கு உரை சொல்வதை இலேசு என்பர். 
      புலவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு நூலாசிரியரால் கூறப்படாமல் விடப்பட்ட செய்திகளைக் கூறுவர். இது நூலை மேலும் புரிந்துகொள்ளக் கூடுதல் உதவியாக இருக்கும். ஆனால் இதில் ஒருவகை ஆபத்தும் உண்டு. சில சமயங்களில் நூல் எழுதப்பட்ட காலத்திற்குப் பிற்பட்ட தமது காலத்தில் தோன்றிய வழக்குகளையும் தாம் அறிந்த செய்திகளையும் நூலாசிரியர் கூறியதாக சேர்த்துக் கூறிவிடுவர். பழமையைப் போற்றுவதில் உள்ள அக்கறையால் புதியதையும் பழையதற்குள் ‘அடக்கிக் காட்டுவர்’. தமிழ் மரபில் இலேசுவும் விதப்புக் கிளவிகளும் இவ்வாறு அடக்கம் செய்தவற்றை யாரேனும் தனியாக ஆராய்ந்தால் அது தமிழுக்கு நல்லது. 
 
கடிசொல் இல்லை காலத்துப் படினே

பழையன கழிதலும் புதியன புகுதலும் 
வழுவல கால வகையி னானே 

என்று மொழிவளர்ச்சிக்கும் புதிய போக்கிற்கும் வாயில் கதவுகளை அகலத் திறந்து வைத்துச் சென்ற நூல்கள்தாம் தொல்காப்பியமும் நன்னூலும். ஆனால் இதற்கு மாறாக தொல்காப்பியத்திற்குள்ளும் நன்னூலுக்குள்ளும் இப்படி எதையெடுத்தாலும் அடக்கிக் காட்டுவது அந்த நூல்களின் கொள்கைக்கே எதிரானது என்பதை ஏனோ உணர்வாரில்லை.
         இக்கால இலக்கண அறிஞரான பாவலரேறு ச. பாலசுந்தரம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் இரண்டாவது நூற்பாவிற்கு உரை எழுதும்போது ‘…… ஓரன்ன என்றமையான், ஒருபுடை ஒப்புமையே கொள்க. அவையாவன: மொழிக்கு உறுப்பாதலும், மாத்திரை பெறுதலும், அசைக்கு உறுப்பாதலும் ஆம். …….. ஆய்தம் உயிர் ஏறலின்றி யாண்டும் ஒலிப்பொடு வரும் பண்பினது என்பது விளங்க ஒலிக்குறிப்பினதாகிய புள்ளியை விதந்து ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’ என்று கூறினார். …… ஆய்தம் யாண்டும் ஒலிப்பொடு நிற்றலான், இதனை உயிர் ஊர்வதில்லை; அரை மாத்திரை ஆதலின் அது மெய்யினை ஊர்வதில்லை. இங்ஙனம் உயிருக்கும் ஒற்றுக்கும் இடைப்பட்டு நிற்றலின், உயிர் போலவும் ஒற்றுப் போலவும் முறையே அலகு பெற்றும் பெறாதும் வரும் என அறிக’ என்கிறார்6 .
    ‘தமிழ் எழுத்துகள் முப்பது; சார்ந்து வரும் மூன்று தவிர’ என முதல் நூற்பாவில் கூறிய தொல்காப்பியர் அதன் தொடர்ச்சியாக அந்த மூன்று எழுத்துகள் எவை என்பதை இரண்டாம் நூற்பாவில் தெரிவிக்கிறார்; அவ்வளவுதான். இதற்குத்தான் பாவலரேறு ச. பாலசுந்தரம் இலேசு, விதப்புக் கிளவிகளைப் பயன்படுத்தித் தான் அறிந்தவற்றை எல்லாம் தொல்காப்பியருடையதாகக் கருத்தேற்றம் செய்கிறார்.  
  தமிழ் ஒலியிலக்கணம் பற்றி ‘உயிர் என்னும் ஒலியை உயிருள்ளனவெல்லாம் வழங்குகின்றன. மெய் என்னும் ஒலியை உயிரில்லாதனவெல்லாம் வழங்குகின்றன.’ எனக் கூறும் பா.வே. மாணிக்க நாயக்கர் ‘ஆய்தம்(ஃ) என்னும் உயிர்ப்பொலியை உலகம் முழுவதும் வழங்குகின்றது’ என்கிறார்7. ஆய்தத்தை உயிர்க்கும் மெய்க்கும் மேலாக ‘உயிர்ப்பொலி’ எனச்சொல்லிக் காட்டியதோடு விட்டுவிட்டார் போலத் தெரிகிறது.
      இது நிற்க.

புதிய மாற்றம்
         எந்த இலக்கண நூல் அளபெடை அல்லாத ஒற்றை ஆய்தம் அலகு பெறாது என்று விதித்ததோ அதே இலக்கண நூலின் உரைமேற்கோள் பாடல் ஒன்றில் ஒற்றை ஆய்தம் அலகு பெற்று வந்துள்ளது வியப்பிற்குரிய முரண். ஆம், ஒற்றை ஆய்தம் அலகு பெறாது என்று விதித்த யாப்பருங்கல விருத்தி உரையின் நலிபு வண்ணத்திற்கான மேற்கோள் பாடலில் ஒற்றை ஆய்தம் அலகு பெற்று வந்துள்ளது. மட்டுமல்லாமல் திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பிறவற்றிலும் அலகு பெற்று வந்துள்ளது ஏற்கனவே காட்டப்பட்டது.
     எனவே, ஆய்தம் அலகு பெறுவது என்பது ஒரு புதிய மாற்றமாகத் திருக்குறள் காலத்திற்கு முன்பிருந்தே தோன்றி மெல்ல வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இது பழமைக்கு மாறாகத் தோன்றியதால் எல்லாராலும் ஏற்க இயலாத புலமைக் குழப்பம் இலக்கணிகளிடையே நிலவியுள்ளது.
        தொல்காப்பியம் மொழி மரபில் 5,6,7 ஆகிய மூன்று நூற்பாக்கள் ஆய்தம் பற்றிப் பேசுகின்றன8. ஒருமொழி ஆய்தம், புணர்மொழி ஆய்தம், குறிப்புமொழி ஆய்தம் என அவற்றின் பொருண்மையை வகைப்படுத்தலாம். 
   ஏழாம் நூற்பாவிற்குக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும் நச்சினார்க்கினியர் செய்யுளியலை நோக்கி ஒற்றளபெடையைக் கருத்தில் கொண்டு உரை எழுதுகிறார். உருவமும் இசையும் பற்றி வரும் குறிப்பு மொழிகள் மட்டுமல்லாது பிற மொழிகளில் வரும் ஆய்தமும் சிறுபான்மை மிகுந்து ஒலிக்கும். அப்போது கஃஃறு, சுஃஃறு, எஃஃகு என்றவாறு இரண்டு ஆய்தம் இட்டு எழுதப்படும் என்கிறார்9. நூற்பாவிலுள்ள ‘எழுத்தின் இயலா’ என்பதற்கு ஒற்றை எழுத்தாக வராது; இரட்டையாக வரும் எனப் பொருள்கொள்கிறார். குறிப்புச் சொற்கள் மட்டுமன்றி பிறவற்றையும் சேர்த்துக்கொள்கிறார். நச்சினார்க்கினியரின் கருத்து ‘அளபெடை அல்லாக் காலத்து ஆய்தம் அலகு பெறாது’ என விதித்த  யாப்பிலக்கண நூல்களின்  பிரதிபலிப்பு எனலாம்.
          நச்சினார்க்கினியரைப் பின்பற்றி உரை கூறும் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவ்வாறு இரட்டையாக எழுதப்படும் ஆய்தம் வேறு; அளபெடை ஆய்தம் வேறு என்கிறார். குறிப்புச் சொற்களில் வரும் இரட்டை ஆய்தத்தை அளபெடை ஆய்தமாகக் கொள்ள முடியாது. ஏனெனில், அளபெடை ஆய்தம் குறிப்புச் சொற்களில் வராது; பெயர்ச்சொற்கள், வினைச் சொற்களில் மட்டுமே வரும் என வேறுபடுத்துகிறார் அவர்10. 
         இதே நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர் நிறத்தின் மிகுதியையும் ஓசையின் மிகுதியையும் குறித்து வரும் கஃறு, சுஃறு என்னும் குறிப்பு மொழிகளில் வரும் ஆய்தம் அரை மாத்திரையையும் விட நீண்டு ஒலிக்கும்; அந்த நீட்சியைக் காட்ட இன்னொரு ஆய்தத்தைக் கூடுதலாக எழுதத் தேவையில்லை; ஒற்றை ஆய்தமே போதும் என்கிறார்11.
      ஆக ஆய்தத்தின் ஒலி நெடுக்கத்தைக் குறிக்கும் வகையில் ஆய்தத்தை வரிவடிவில் எழுதிக்காட்ட ஒற்றை ஆய்தமே போதும் என்பதும் இரட்டை ஆய்தம் வேண்டும் என்பதுமான இருவகையான நிலைப்பாடுகள் நடைமுறையில் இருந்துவந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.
         ஆய்தம் அளபெடுக்காத குறிப்பு மொழிகளில்  ஒலி நெடுக்கம் தேவையான இடத்திலும் கூட ஒற்றை ஆய்தமே போதும் என்னும் இளம்பூரணரின் கருத்து அவருக்கு முன்பே தோன்றியிருந்து, நாளடைவில் வலுப்பட்டது எனலாம். இதுவே குறிப்பு மொழிகள் மட்டுமல்லாது பிற சொற்களுக்கும் உரியதாக விரித்துக்கொள்ளப்பட்டது எனக் கருத இடம் உண்டு. 
      நேமிநாதம் தன் காலத்திய மாற்றத்தைப் பதிவு செய்யும் வகையில் ஆய்தத்தையும் முதல் எழுத்துகளுள் ஒன்றாகச் சேர்த்து எண்ணியது இதனால்தானோ என நினைக்கத் தோன்றுகிறது. 
      எழுத்திலக்கணத்தில் இடம்பெற்ற இக்கருத்தியல் யாப்பிலக்கணத்திற்கும் பரவியிருக்க வேண்டும். இதன் விளைவாகவே நாளடைவில் ஒற்றை ஆய்தம் உயிர் போல அலகு பெற்று வருவதாக யாப்பியல் வளர்ச்சி பெற்றது எனலாம். 

ஏற்பது வளர்ச்சி
         தொல்காப்பியத்தில் சொல்லுக்கு முதலில் 3 இடங்களில் மட்டும் வந்த சகர எழுத்து பிற்காலத்தில் எல்லா உயிரோடும் கூடி மொழிமுதல் ஆனது. சிறுபான்மை இடம்பெற்ற தளை இலக்கணம் பிற்காலத்தில் வகுத்தும் தொகுத்தும் கூறப்படும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது.
   பாக்களில் இருந்து பாவினங்கள் வளர்ச்சி பெற்றன. பாட்டுடைச் செய்யுளுக்கு இடையே வந்த உரை பிற்காலத்தில் உரைநடையாக வளர்ச்சி பெற்றது. வண்ணமும் வனப்பும் தனித்த இலக்கிய வகைகளாக வளர்ச்சி பெற்றன. அவற்றைப் போலவே ஆய்தம் உயிரெழுத்தாக அலகு பெற்றதான வளர்ச்சியையும் நோக்கிட வேண்டும்.
      மேலே காட்டப்பட்ட வெண்டளை பயின்று வந்த தரவுகள், அலகு பெறுமாறு வரும் ஆய்தத்தின் இலக்கணத்திற்கு வலுவூட்டுவனவாகவே உள்ளன.
           ஒற்றை ஆய்தம் மெய் போல அலகு பெறாமல் வரும்; உயிர் போல அலகு பெற்றும் வரும். ஆய்தம் ஒற்றளபெடை போல வந்தும் அலகு பெறுதல் உண்டு என ஆய்தம் அலகு பெறுவது பற்றிய இலக்கணத்தை விரிவுபடுத்திக் கொள்வதால் கேடு ஒன்றும் இல்லை. 
          ஆய்தம் உயிர் எழுத்துப் போல அலகு பெறும் என்றால்  மாத்திரையில் சிக்கல் வருமோ என்னும் ஐயம் எழலாம். குற்றியலிகரமும் குற்றியலுகரமும் உயிர் எழுத்தாக இருப்பினும் அவை அரை மாத்திரை பெறும் என்பதையும் அசைக்கு உறுப்பாகி வந்து சில இடங்களில் குறில் எழுத்துப்போல அலகு பெற்று நிற்கும் என்பதையும் யாப்பிலக்கண நூல்கள் ஏற்றுக்கொண்டுள்ளன12. இதையே ஆய்தத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். எனவே, ஆய்தம் அலகு பெற்று வருவதில் மாத்திரைக் குழப்பம் தேவையில்லை.
            மேற்கண்டவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது

                 தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே
                 அளபெடை அல்லாக் காலை யான.
என்னும் யாப்பருங்கல நூற்பாவுக்குப் புறனடையாக
                தளைசீர் வண்ணந் தூக்கோ(டு) இழுக்கின்
                ஆய்தம் உயிரலகு பெறுதலும் வரையார்

என்னுமாறு புதியன தழுவி விதி இயற்றப்பட்டிருக்க வேண்டும். மூல நூலாசிரியனோடு மாறுபட்டுவிடக் கூடாது என்னும் அதீத எச்சரிக்கையால் ஏற்பட்ட புலமைத் தயக்கம் இலக்கணிகளின் கையைக் கட்டிப் போட்டுவிட்டதோ என்னவோ.
           மொழியால் பக்குவப்பட்டு புதியதாகத் தோன்றும் ஒன்றை நம் மரபு மனம் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலோர் மாற்றத்தை, வளர்ச்சியை அங்கீகரிக்கும் மனம் இன்றி எதையும் பழமைக்குள் அமிழ்த்தி விடுவர். தம் பிடிவாதத்தால் மொழியின் வளர்ச்சி தடைபடுமே என்கிற கவனம் இல்லாமலேயே தம் கருத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டுவர். ஆய்த எழுத்து அலகு பெறுதல் பற்றிய நம் புலவர்களின் மனக்கருத்தும் இத்தகையதுதான். 
    பழமையைப் போற்றுகிற போர்வையில் புதிய வருகையைப் புறந்தள்ளிவிடக் கூடாது. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் மரபில் வந்தவர்கள் நாம். எனவே, வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி மொழிக்கு ஊறு விளைவிக்காத புதிய வரவுகளுக்கு ஏற்ப விதி செய்வதே மொழிக்கு நன்மை செய்வதாகும்.  
                                        ----------------------------------

மேற்கோள்கள்

1. யாப்பிலக்கண நூல்கள்
1……… ஒற்றள பாய்விடின் ஓரலகாம்              யாப்பருங்கலக் காரிகை 51

2. தனிநிலை யொற்றிவை தாமல கிலவே
யளபெடை யல்லாக் காலை யான. யாப்பருங்கல விருத்தி நூற்பா 3 ப.38

3. அளபெழி னல்லதை யாய்தமு மொற்று
மலகியல் பெய்தா வென்மனார் புலவர்                 அவிநயம் யா.வி.3மே. ப.38

4. ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
வேறல கெய்தும் விதியின வாகும்               காக்கைபாடினியார் யா.வி.3 மே.ப.39

5. “தாமலகிலவே” என்றவழி ஏகார விதப்பினால் ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து குற்றெழுத்தின் பயத்தவாய் ஓர் அலகு பெறுவது அல்லது முன்னும் பின்னும் நின்ற எழுத்தினோடு புணர்ந்து நிரையசை யாகாவெனக் கொள்க.                                                                             யா.வி. நூற்பா 3 உரை ப.39

2. ஆய்தம் அலகு பெற்றுவரும் இடங்கள்(20)

திருக்குறள்
1. அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி                226
2. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்                363
3. கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை                414
4. அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு                       943
5. இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது                         1166

நாலடியார்
6. நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வ மெண்ணுங்காற்
பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ
கண்ணவாத் தக்க கலம்                251
7. கடக்கருங் கானத்துக் காளைபின் னாளை
நடக்கவும் வல்லையோ வென்றி – சுடர்த்தொடீஇ
பெற்றா னொருவன் பெருங்குதிரை யந்நிலையே
கற்றா னஃதூரு மாறு.                       398
பழமொழி நானூறு
8. பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச்
சிறியா ரினமா யொழுகுதல் – எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
பூவொடு நாரியைக்கு மாறு.                88
9. அற்றாக நோக்கி அறத்திற் கருளுடைமை
முற்ற அறிந்தார் முதலறிந்தார் – தெற்ற
முதல்விட் டஃதொழிந்தோர் ஓம்பா வொழுக்கம்
முயல்விட்டுக் காக்கை தினல்             370

யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
10. எஃகொ டவன்காப்ப வேமாந்தாள் போதந்தாள்
அஃகுநீர்க் கான்யாற் றயன்மண லெக்கர்மே
லிஃதோநின் பாவை திருந்தடிப் பின்றை
யஃதோ  விடலை யடி.                 யா.வி. பகுதி 2 நூற்பா 95 ப.35

நந்திக்கலம்பகம்
11. சென்றஞ்சி மேற்செங்கண் வேழம் சிவப்பச் சிலர்திகைப்ப
அன்றும் சினத்தார் இனமறுத் தார்போலும் அஃதஃதே
குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டம் குறிகுருக் கோட்டையின்மேல்
சென்றஞ்சப் பட்டதெல் லாம்படும் மாற்றலர் திண்பதியே.           16
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
12. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவு(ம்) அஃகா
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் – நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்                                   77

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
13. அடிவண்ணந் தாமரை அன்றுலகம் தாயோன்
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம் – முடிவண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியு மஃதன்றே
ஆராழி கொண்டார்க் கழகு                                      5

நீதிநெறி விளக்கம்
14. எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து
உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து                                 5

நேமிநாதம்
15. ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி
நீதியினால் யவ்வியையின் ஐயாகும்….                   9
16. செயிரில் அஃறிணையாம்     சென்று         27
17. பாங்கில் அஃறிணைப்பா லாம்                 28
18. ஏய்ந்த அஃறிணைப்பாற் கீங்கு                  29
19. அயர்வில் அஃறிணையே ஆம்                 33
20. எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையா 34
21. ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின் 72

3. தெ.பொ.மீ. தமிழ் மொழி வரலாறு        ப.126
4. நா. முத்துநிலவனின் ‘திருக்குறளில் தளைப் பிழை இல்லை, பாட 
பேதம் உண்டு’ கட்டுரை 05.08.13 valarumkavithai.blogspot.in
5. க. வெள்ளை வாரணனார் தொல்காப்பியம் – நன்னூல் 
எழுத்ததிகாரம் ப. 28
6. ச. பாலசுந்தரம் தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் உரைக்கொத்து ப.38
7. என். கே.வேலன் தமிழ்ப் பேரறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் ப.84
8. ச. பாலசுந்தரம் தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் உரைக்கொத்து பக். 157-170

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே              (5)
ஈறுஇயல் மருங்கினும் இசைமை தோன்றும்          (6)
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான                                         (7)
9. மேலது பக்.164,165
10. மேலது ப.169 
11. மேலது பக்.163,164
12. யா.வி. நூற்பா 4 ப.42; யா.கா. 51 ப. 175

துணை நூல்கள்
1. பழைய தமிழ்க் கவிதை இலக்கணம் யாப்பருங்கலம் விருத்தி பகுதி 1,2; ச.பவானந்தம் பிள்ளை ப.ஆ., 2001 முதல் பதிப்பு, சென்னை: டாக்டர். எம். தேன்மொழி.
2. யாப்பருங்கலக் காரிகை சு. சாமிஐயா ப.ஆ., 2003 நான்காம் பதிப்பு; அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
3. தமிழ் மொழி வரலாறு  தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், 2007 முதற்பதிப்பு, சென்னை: முல்லை நிலையம்.
4. திருக்குறளில் தளைப் பிழை இல்லை, பாட பேதம் உண்டு நா. முத்துநிலவன் கட்டுரை 05.08.13  valarumkavithai.blogspot.in
5. தொல்காப்பியம் – நன்னூல் எழுத்ததிகாரம் க. வெள்ளை வாரணனார், டிசம்பர் 2001 முதல் பதிப்பு, சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
6. தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் கணேசையர் பதிப்பு, 2007 இரண்டாம் பதிப்பு, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
7. தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் உரைக்கொத்து, தி.சா. கங்காதரன் ப.ஆ, ஆகஸ்டு 2007 முதல் பதிப்பு, தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூலகம், வெளியீட்டு எண் 501 .
8. நேமிநாதம் உரையுடன் 2004 முதல் பதிப்பு, சென்னை: எம். வெற்றியரசி.
9. திருக்குறள் (ஜைன உரை) டிசம்பர் 1991, முதல் பதிப்பு, தஞ்சாவூர்: சரஸ்வதி மகால் நூல்நிலையம்.
10. நாலடியார் தெளிவுரை 1982 முதல் பதிப்பு, திருநெல்வேலி: தமிழ்நாடு மாநிலத் தமிழ்ச் சங்கம்.
11. பழமொழி நானூறு ஆகஸ்டு 1941 முதல் பதிப்பு, மே 1968 மறு அச்சு, திருநெல்வேலி: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
12. நந்திக்கலம்பகம் நவம்பர் 2003 இரண்டாம் பதிப்பு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
13. முதலாழ்வார் மூவர் இயற்பா டிசம்பர் 1988 முதல் பதிப்பு, சென்னை: ஆழ்வார்கள் அமுத நிலையம்.
14. நீதிநூல் தெளிவுரை சூலை 2006 முதல் பதிப்பு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
15. தமிழ்ப் பேரறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் மே 1972 முதல் பதிப்பு, திருநெல்வேலி: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 
16. நேமிநாதத்தின் இலக்கண உருவாக்கம் முனைவர் பட்ட ஆய்வேடு,          நா. அருள்முருகன், நவம்பர் 2010, சேலம்: பெரியார் பல்கலைக் கழகம்.


7 comments:

  1. வணக்கம்
    .இலக்கணம் பற்றி அதன் விதி முறைகள் பற்றி சிறந்த திறனாய்வு மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் சொல்லிய கருத்தை 3பதிவில் சொல்லியிருந்தால் படிப்பவர்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். நீண்டு விட்டது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். எனது கட்டுரையைத் துணைநூல் பட்டியலில் இணை்த்துச் சொன்ன உங்கள் பெருந்தன்மைக்கு என் தலைதாழ்ந்த வணக்கம். உண்மையில் நான் அந்தக் கட்டுரையை எழுதக் காரணமே தாங்கள் தமிழாசிரியர் மத்தியில் எழுப்பிய வினாக்கள்தாம். விரைவில் வெளிவரவுள்ள எனது நூலில் தங்களின் தூண்டுதலை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். சுடர்விளக்காயினும் தூண்டுதல் வேண்டும். தங்களின் தூண்டல், தமிழின் அறியாப் பகுதிகளை -என்போலும் ஆர்வலர்கள்- அறியும்படியாகத் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா.ஒரு ஆய்வுக்கட்டுரை எப்படி அமைய வேண்டும் என்பதை உணர வைத்தது இக்கட்டுரை.ஆய்தம் பற்றி விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி அய்யா...

    ReplyDelete
  4. ஐயா அவர்களுக்கு வணக்கம். ஏற்பது வளர்ச்சி, இனியொரு விதி செய்வோம் எனும் முழக்கங்கள் ஆய்த எழுத்துப் பற்றிய யாப்பியல் மயக்கத்தைத் தெளியச்செய்கின்றன. ஆய்த எழுத்துக்கான சிறப்பான புறனடை இந்தக் கட்டுரை. புதுமையை ஏற்றால்தான் மரபு இலக்கணம் வளர்ச்சிபெறும் என்று கூறும் துணிந்துரையும் அளபு எடுக்காத நிலையிலும் ஆய்தம் அலகு பெறும் எனத் தக்க சான்றுகள் காட்டும் நுழைபுலமும் அருமை ஐயா.
    ஐயா உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். கொஞ்சம் விளக்கெண்ணெய் தாருங்கள். நாங்களும் விழியில் ஊற்றித் தமிழை ஆராய! நன்றி ஐயா. கொ.சுப. கோபிநாத், அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம்.

    ReplyDelete
  5. ஆய்தம் பற்றிய ஆய்வுக்கட்டுரை, எனக்கு முழுவதும் புரியவில்லை..குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன். நன்றி ஐயா

    ReplyDelete
  6. ஆய்தம் குறித்த தங்களின் ஆய்வுக்கட்டுரை படித்தோம். சிறந்ததோர் ஆய்விற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. ஆய்த எழுத்தைப் பற்றிய அருமையான ஆய்வு.. நன்றி ஐயா..

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்