நானும் பதிவர் ஆனேன்

         இது எனக்கு ஓர் அரிய நிகழ்வு. புதுக்கோட்டை மாவட்டத்தை விட்டுப் போவதற்கு முன்னால் நான் கலந்து கொண்ட கடைசி விழாவின் மேடை கவிஞர் தங்கம் மூர்த்தியினுடையது. அன்று எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளர். தலைமையேற்றவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் முனைவர் சுப்பையா.

  இங்கிருக்கிற பல ஆசிரியர்கள், சான்றோர்கள் அன்றைக்குப் பார்வையாளர்கள். வெளி மாவட்டத்திலிருந்து வந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் கலந்துகொள்ளும் முதல் விழா வலைப்பதிவர் திருவிழா 2015. இதிலும் அந்த வரிசை தொடர்கிறது. நிச்சயமாக இது ஓர் அரிய சந்தர்ப்பம்தான்.

     எனக்கு புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் என்று அடிக்குறிப்பு போட்டிருக்கிறார்கள். உண்மையில் அதற்கு நான் முற்றிலும் பொருத்தமானவன் எனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் போகச் சொல்கிற இடத்திற்கு ஓடிக் கொண்டிருப்பவன் நான்.

            நான் விதைதூவி மட்டுமே. அந்த விதை முந்தா நாள் துளிர் விட்டு நேற்று செடியாகி இன்று ஆல மரமாய் விழுது விட்டிருக்கிறது. நான் இந்த மாவட்டத்தில் பணியாற்றியபோது ஒரு சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டேன். நிர்வாகப் பணியில் மட்டுமல்லாது கணினிப் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்ததும் வீதி என்கிற இலக்கியக் களத்தைக் கூட்டியதும் அவற்றுள் அடங்கும். இன்றைக்கு தனியாகக் குறிப்பிடும் அளவிற்கு வீதி விரிவடைந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அனைத்துமே அதனதன் அளவில் புதுக்கோட்டை மாதிரி (PUDUKKOTTAI MODEL / PUDUKKOTTAI SCHOOL OF THOUGHT) என்னும் அளவிற்கு பேசப்படக்கூடியதாக மேம்பட்டிருக்கின்றன. இது எனது அன்பின் நிர்வாகப் பரிணாமம். 

         எல்லாரும் விதைக்கிறார்கள். நல்ல விதை என்று தேர்ந்தெடுத்துத்தான் விதைக்கிறார்கள். ஆனால், எல்லாம் முளைத்து விடுவதில்லை. இந்த விதை முளைத்ததற்குக் காரணம் நான் விதைத்துச் சென்ற நிலம் நல்ல நிலம். ஈர நிலம். நான் தொழில்நுட்பத்தை மட்டும் விதைக்கவில்லை. அதோடு என் அன்பையும் தோழமையையும் விதைத்துச் சென்றேன். குறிப்பாக என் ஆசிரியர்களிடத்திலும் தலைமை ஆசிரியர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் விதைப்புக் கருவியாக இருந்தேன். அவ்வளவுதான். 

       புதுக்கோட்டையில் ஒரு சிலர் தனித்தனியாக வலைப்பதிவராக இருந்தனர். சிலர் முகநூலில் மட்டும் இருந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்தோம். பதிவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். யாரெல்லாம் வார விடுமுறைச் சந்தோஷங்களை இழக்கத் தயாராக இருந்தார்களோ அவர்கள் மட்டும் வந்தார்கள். இருவேறு ஆண்டுகளில் இரண்டு முறை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    நான் சைகை செய்தேன். முத்துநிலவன் கோடிழுத்தார். கவிஞர் கதிரேசன் கோலங்கள் வரைய இடம் கொடுத்தார். திண்டுக்கல் தனபாலன் எப்படி வரைவது என்று நம் கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்தார். விக்கிபீடியா வல்லமை கூட்டியது. கஸ்தூரிரங்கன், ராசி. பன்னீர்செல்வன், பாண்டியன், குருநாத சுந்தரம், ஸ்டாலின் சரவணன், சுரேஷ்மான்யா, ரேவதி,  கீதா, ஜெயலட்சுமி, பொன். க. ஐயா, இன்னும் பல பேர் தூரிகை ஆனார்கள். நானும் பதிவர் ஆனேன். நான் தூங்கினால் கனவு அவர்களுக்கு வரும். அவர்களின் விழிகளில் இருந்த ஆர்வம் எனக்குள் விரிவடைந்தது. என் பார்வையை அவர்கள் மொழிபெயர்த்தார்கள்.
   
  இன்று நான் பேரானந்தத்தில் திளைக்கிறேன். என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். பிரம்மிப்பாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கவிஞர் முத்துநிலவனின் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் இன்று வலைப்பதிவர் திருவிழாவை எடுத்து நடத்தும் அளவிற்கு வல்லமை பெற்றிருக்கிறது. அவரோடு ஒவ்வொரு நாளும் புதியன காணும் கண்களும் நடைமுறைப் படுத்தும் கைகளும் இங்கு இணைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று. அதனால்தான் இது சாத்தியம் ஆகியிருக்கிறது.

    எதையும் தொடங்குவது எளிது. அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது கடினம். இந்த மகிழ்ச்சி இத்தோடு முடிந்துவிடக் கூடாது. வலைப்பின்னல் உலகத்தில் அச்சு ஊடகத்தைப் போலவே எத்தனையோ பேர் எழுத வருகிறார்கள். எல்லாரும் தொடர்வதில்லை. எல்லாரும் தொடர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இல்லந்தோறும் இணையம் என்னும் புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பதிவுகள் மேலும் பெருகும். 

       அச்சு ஊடகத்தை விட இணைய ஊடகம் வலுவானது, விரிவானது, சில ஆங்கிலப் படங்களில் பல்கிப் பெருகி மனிதகுலத்திற்குச் சவால் விடுக்கும் மிருகத்தைப் போன்றது. என்னதான் திரட்டிகள் கொடுத்தாலும் அச்சுக் குப்பைகளை விட இணையக் குப்பைகள் பெருகினால் வாசகன் தேடுதலிலேயே சோர்ந்து போய்விடுவான். எனவே, எழுதுவதில் கவனம் தேவைப்படுகிறது.

      எழுதும் ஒவ்வொன்றும் உங்கள் உச்சம் தொடுவதாக வாசகனின் உள்ளம் தொடுவதாக இருக்க வேண்டும். என்ன எழுதுகிறோம் யாருக்காக எழுதுகிறோம் எதற்காக எழுதுகிறோம் என்னும் கேள்விகள் நமக்குள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். எத்தனை பதிவுகள், எத்தனை பார்வைகள் என்பது மட்டும் நமக்குப் போதுமானவை அல்ல. நம் மொழி, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அறவியல், விமர்சனம், இன்னபிறவற்றை நாம் எவ்வளவு தூரம் பதிவு செய்கிறோம் என்னும் விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
  
   
இதுபோன்ற வலைப்பதிவர் திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். விழா முடிந்ததும் அப்படியே கலைந்து போய்விடாமல் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அதன் முன்மொழிவுகள், தீர்மானங்கள் செயல்திட்டங்களாக நடைமுறைக்கு வர வேண்டும். ஒரு சிறுகதையை / கவிதையை / கட்டுரையை ஒருவர் தன் தளத்தில்(BLOG) தொடங்க மற்றவர் தனது தளத்தில் முடித்து வைப்பது, பலரும் சேர்ந்து ஒரு தளத்தில் நாவல் / நெடுங்கதை / கட்டுரை எழுதுவது, மின் நூல் வெளியீடு என அச்சு ஊடகத்தில் சாத்தியமில்லா இணைய வழி சாத்தியப்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

   மேற்காணும் செயல்வினைகள் படைப்பாளர்களுக்குப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தனியர்கள் இணைந்து உலகளாவிய படைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி கூர்மைப்படும்போது உண்மையாகவே தமிழ் மொழியில் உலக இலக்கியம் தோன்றச் சாத்தியம் உள்ளது. அதற்குப் புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வாசல் திறந்து வைப்பதாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

               வலைப்பதிவர் திருவிழா 11.10.2015 தொடக்க உரையின் பதிவாக்கம்

27 comments:

  1. // கேள்விகள் நமக்குள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்... //

    இது தான், இதுவே தான் மிகவும் முக்கியம் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  2. நன்றாகவே சொன்னீர்கள் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் போன்று எல்லா மாவட்டத்திலும் உருவாக வேண்டும்; செயல்பட வேண்டும். நிறைய வலைப்பதிவர்கள் ஒருங்கிணைய வேண்டும்.

    ReplyDelete
  3. தங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    //..என்னதான் திரட்டிகள் கொடுத்தாலும் அச்சுக் குப்பைகளை விட இணையக் குப்பைகள் பெருகினால் வாசகன் தேடுதலிலேயே சோர்ந்து போய்விடுவான்
    தமிழில் தேடுவது மேம்பட்டதாக இல்லை. ஆங்கிலம் அல்லாத மொழிகளை கணினிக்கு புரிய வைப்பது அவ்வளவு சுலபமில்லை. இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது.

    // உண்மையில் அதற்கு நான் முற்றிலும் பொருத்தமானவன் எனச் சொல்லிவிட முடியாது.
    பணியுமாம் என்றும் பெருமை..

    ReplyDelete
  4. தங்கள் பதிவின் அரிய வரிகள் அனைத்தையுமே “என் பார்வையை அவர்கள் மொழிபெயர்த்தார்கள்“ எனும் வரிக்குள் அடக்கிவிடலாம்.
    நிலம் முன்பே நன்றாகத்தான் இருந்தது, நேர்த்தியான விதை விழுந்த பிறகே ஆலமரம் எழுந்தது, வளர்ந்தது..விழாவும் நடந்தது. எங்கள் விழாத்தளத்திலும், எனது தளத்திலும் மறுபதிவு செய்திருக்கிறேன் அய்யா.. என் உணர்வைச் சொல்ல் வேறு சொற்கள் இல்லை. வணக்கம்

    ReplyDelete
  5. பெருமதிப்பிற்குரிய அய்யா,
    வ.க கடிதங்களை மட்டுமே எதிர்பார்த்தேன்..
    உங்கள் உரையை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை..

    கூட்டமாய் இருந்தால் கோவில்களுக்கே செல்ல மாட்டேன் நான்..
    இன்று கூட்டங்களுக்கு வருகிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்களும் நிலவன் அண்ணாவும் வீதியின் வரையறைகளாக தந்த விதிமுறைகள்தான்.

    வீதி உங்கள் இலக்கிய வீச்சை எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

    சமீபத்தில் நடந்த நல்ல விஷயங்கள் உங்கள் காதுக்கு வந்திருக்குமே..

    அருள் இல்லாத வீதிக் கூட்டங்கள் நிலவோடு தொடர்வது எனக்கு ஆறுதல் மட்டுமல்ல
    அனைவருக்கும்
    நல்லோதோர் இலக்கியத் தளமாகவும் இருக்கிறது...

    நன்றிகள் அதற்கு

    நீங்களும் அண்ணாத்தே நிலவனும் அமைத்த வழியில் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்

    ReplyDelete
  6. தனியர் முயற்சி கூட்டாக அமையும்போது பல நல்ல சாதனைகளை நிகழ்த்தலாம் என்ற தங்களின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது. அவ்வாறே செய்வோம். நன்றி.

    ReplyDelete
  7. தலைப்பு மாறினாலும்
    விதைதூவும் வித்தை எல்லோருக்கும்
    வாய்த்துவிடுமா
    கைவந்துவிட அது ஒன்றும் எளிய விசயம் அல்லவே...
    தலைப்பு பதிவில் மாறியிருக்கலாம்
    எங்கள் மனங்களில் அல்ல

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா...
    உங்களின் எண்ணங்களைச் செயலாக்கும் முயற்சியில் நிலவன் அண்ணனுடன் நாங்களும் பயணிக்கின்றோம்....உங்களின் எதிர்ப்பார்ப்பை செயல் படுத்த துவங்கியுள்ளோம்...நாளும் நாளூம் அது விரிவடைந்து தன் வழியில் செல்லும்...நாங்களும் அதனுடன் பயணிப்பதில் மகிழ்கின்றோம்...நன்றி..நீங்கள் புதுகை மக்களின் மனதில் பதிவரானதன் விளைவே ...இவ்விழாவின் வெற்றிக்கு காரணம்.....மிக்க நன்றி...

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா...
    உங்களின் எண்ணங்களைச் செயலாக்கும் முயற்சியில் நிலவன் அண்ணனுடன் நாங்களும் பயணிக்கின்றோம்....உங்களின் எதிர்ப்பார்ப்பை செயல் படுத்த துவங்கியுள்ளோம்...நாளும் நாளூம் அது விரிவடைந்து தன் வழியில் செல்லும்...நாங்களும் அதனுடன் பயணிப்பதில் மகிழ்கின்றோம்...நன்றி..நீங்கள் புதுகை மக்களின் மனதில் பதிவரானதன் விளைவே ...இவ்விழாவின் வெற்றிக்கு காரணம்.....மிக்க நன்றி...

    ReplyDelete
  10. ///விதைக்கிறார்கள். நல்ல விதை என்று தேர்ந்தெடுத்துத்தான் விதைக்கிறார்கள். ஆனால், எல்லாம் முளைத்து விடுவதில்லை. இந்த விதை முளைத்ததற்குக் காரணம் நான் விதைத்துச் சென்ற நிலம் நல்ல நிலம். ஈர நிலம். நான் தொழில்நுட்பத்தை மட்டும் விதைக்கவில்லை. அதோடு என் அன்பையும் தோழமையையும் விதைத்துச் சென்றேன். குறிப்பாக என் ஆசிரியர்களிடத்திலும் தலைமை ஆசிரியர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் விதைப்புக் கருவியாக இருந்தேன். அவ்வளவுதான். ///
    அன்பையும், பாசப் பிணைப்பையும் அல்லவா சேர்த்து விதைத்துச் சென்றிருக்கிறீர்கள்
    தங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்

    ReplyDelete
    Replies
    1. 'அன்பையும், பாசப் பிணைப்பையும் அல்லவா சேர்த்து விதைத்துச் சென்றிருக்கிறீர்கள்' உண்மைதான் அய்யா. நாங்கள் எதிர்பார்த்த விதையை நீங்கள் தூவினீர்கள். நீங்கள் மட்டும்தான் தூவினீர்கள்.. இன்று இன்னொரு விழுதுக்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம்... அதற்கும் தங்கள் ஆலோசனைகள் தேவை. சரியாகச் சொன்ன கரந்தையார்க்கு நன்றி. தொடர்வோம் அய்யா. ”எம்கடன்...”

      Delete
  11. வணக்கம் ஐயா! உங்கள் பணிகளை அறிந்து உங்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. நேரலையில் உங்கள் உரையைக் கேட்டு மகிழ்ந்தேன்.
    நீங்கள் சொல்வது போல் தரமான பதிவுகளை எழுதி, நண்பர்கள் இணைந்து இணையத்தில் தமிழ் வளர்ப்போம். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அய்யா, வணக்கம். சங்கத்தமிழை ஆங்கிலத்தில் மறுஆக்கம் செய்துவரும் இந்த எங்கள் தங்கையின் தள முகவரி - http://sangamliteratureinenglish.blogspot.com/ பார்த்து, தங்கள் ஆலோசனைகளை வழங்கிட அன்புடன் அழைக்கிறேன்.

      Delete
    2. என் தளம் பற்றி ஐயாவிடம் சொன்னதற்கு நன்றி அண்ணா.

      ஐயா, நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது என் தளத்தைப் பார்த்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள். நன்றி ஐயா.

      Delete
  12. தங்கள் சிறப்பான பணிகளைப் புதுக்கோட்டையர்கள் பலரும் என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி அவர்கள் பேசப்பேசத் தங்கள் மீது என் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் இத்தகைய பணிகளைத் தொடருங்கள். தொடருபவர்களை ஊக்குவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். - இராய செல்லப்பா

    ReplyDelete
  13. வணக்கம் அய்யா.
    தங்களின் பங்கேற்பால் தரமுயர்ந்தது வலைப்பதிவர் திருவிழா.
    தரமான நிலம் தேர்ந்து, தரமான விதைகளைத் தங்களைப் போன்ற தரமானவர், தருணம் பார்த்து விதைத்து உரமிட்டு நீரூற்றியுள்ளபோது அதன் விளைச்சலின் வீரியம் பற்றி வியப்பதற்கேதுளது?

    ReplyDelete
  14. ஐயா! மீண்டும் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அருமையான நடையில் கருத்துக்களை தந்திருக்கிறீர்கள். தங்கள் அரிய முயற்சி நல்ல தாக்கத்தையும் விளைவைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கள் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தொடரட்டும்.

    ReplyDelete
  15. வணக்கம் அய்யா
    தங்களின் நட்பு எங்களுக்கெல்லாம் பெரும்பேறு. இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் வருகை தந்து விழாவிற்கு பெருமை சேர்த்ததோடு நம் விழா என்பதை உணர்த்தி விட்டீர்கள். வந்தவர்களிடமெல்லாம் தங்களைப் பற்றி சொல்லிச் சொல்லி சிலாகித்தேன். ஆசிரியர்களுக்கும் அலுவலருக்கும் இடையே இப்படியொரு அன்பும் புரிதலுமா என்று அதிசயித்து பேசியது செவிகளுக்கு எட்டியது. தங்களுக்கே உரிய நேர்த்தியான நடையில் எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பதைச் சொல்லி விட்டீர்கள் அதன் வழி நடப்பது எங்களின் கடமை. தாங்கள் ஆசிரியர் புத்தாக்க பயிற்சியில் கணினி வகுப்புக்கு திட்டமிட்டதால் நான் எழுதத் தொடங்கினேன் என்பதை அன்போடு என்றும் நினைவு கொள்கிறேன். முத்துநிலவன் அய்யாவின் ஊக்கமும் வழிகாட்டதலையும் என்றும் மறவேன். தங்களின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து பயணிக்க வேண்டிய தூரமும் சமூகத்திற்கு தர வேண்டிய ஆக்கமும் நிரம்ப இருக்கிறது. தொடர்ந்து வழிநடத்துங்கள் அய்யா. அனைத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  16. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் உருவாகக் காரணம் நீங்கள் தான் என்றறிந்த போது உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடிற்று. நம் மொழி, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அறவியல், விமர்சனம், இன்னபிறவற்றை நாம் எவ்வளவு தூரம் பதிவு செய்கிறோம் என்னும் விழிப்புணர்வு மிக மிக அவசியம் என்று பதிவர்களுக்கு நீங்கள் சொல்லியிருக்கும் அறிவுரையைக் கண்டிப்பாக நான் ஏற்றுச் செயல்படுவேன். உங்களை அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. மிகவும் நன்றி அய்யா!

    ReplyDelete
  17. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  18. அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அய்யாவிற்கு,
    ஒரு பெரிய சாதனையை மிகவும் மென்மையாக அலட்டல் இன்றி செய்து காட்டியது மட்டுமில்லாமல் அடுத்த மாவட்டத்திற்கு பணியின் காரணமாக சென்றாலும் தாங்கள் விதைத்த விதைகள் இன்று பெரிய விருட்சமாக வீறு கொண்டு நிற்பதை தாயுள்ளத்துடன் அன்று வந்து பார்த்து ரசித்ததை நாங்களும் கண்டு இன்புற்றோம். நன்றி அய்யா.

    ReplyDelete
  19. வணக்கம் அய்யா! தங்களின் மேலான வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அய்யா ! நீங்கள் விதைப்புக் கருவியா! விதைக்கின்ற மந்திரக்கோலை வைத்திருக்கிறீர்கள் ! வளம் செய்யும் ஆற்றல் பெற்றது அது !

    ReplyDelete
  20. ஐயா வணக்கம். தங்களின் வரிகள் ,தங்களைப் போலவே..அத்தனை இயல்பாக இருக்கிறது.வீரியமான விதைகளை நேர்த்தியாக விதைத்துள்ளீர்கள்.தாங்கள் எங்களுடன் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும்,அங்கிருந்தபடியே அடுத்த கட்டத்தை நோக்கி எங்களை அழைத்துசெல்லும் தங்களின் செயல் வியக்கவைக்கிறது. கண்கள் பனிக்க நன்றி கூறுகிறோம்.
    " ஒரு சிறுகதையை / கவிதையை / கட்டுரையை ஒருவர் தன் தளத்தில்(BLOG) தொடங்க மற்றவர் தனது தளத்தில் முடித்து வைப்பது, பலரும் சேர்ந்து ஒரு தளத்தில் நாவல் / நெடுங்கதை / கட்டுரை எழுதுவது, மின் நூல் வெளியீடு என அச்சு ஊடகத்தில் சாத்தியமில்லா இணைய வழி சாத்தியப்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்"...தங்களின் இந்த விதை தமிழ் வலையுலகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.நன்றி ஐயா..!

    ReplyDelete
  21. கொஞ்ச நாட்களாக நான் வலைப்பதிவு பக்கம் வரவில்லை. அதனால் உங்களைலாம் மிஸ் பண்ணிட்டேன். விழாவிற்கு வராத ஏக்கத்தை அதிகமாக்கியது உங்கள் பதிவு.தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்