எந்தையும் தாயும்



        ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வருகிறது. நாம் பிற தினங்களைக் கொண்டாடுகிற அளவிற்கு நமக்கான தினத்தைப் பிறர் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு நாம் இல்லையா அல்லது சமூகம் நம்மைக் கொண்டாட மறந்துகொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கட்டும். வாருங்கள் நம்மை நாமே கொண்டாடிக்கொள்வோம்.


    நாம் எத்தனையோ ஆசிரியர்களிடம் பாடம் கற்றிருப்போம். சராசரி ஆசிரியர்களின் பெயர்கள் மறந்து கூடப் போயிருக்கும். ஒருசில ஆசிரியர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே எஞ்சியிருப்பர். சிலர் மட்டும்தான் மாணவர் சிகரம் தொடத் தாம் படிக்கட்டாகி அடுத்து வரும் மாணவர்க்காய்க் காத்திருப்பர். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றிச் சொல்ல ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ இருக்கும். 
       என் திசைகளுக்குச் சிறகுகள் முளைக்க வைத்த - என்னில் நடமாடும் - ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் இல்லாவிட்டால் எனக்கு ஏது இத்தனை உயரம்? இன்று என்னுடைய கல்வித் தகுதி வேண்டுமானால் அவர்களை விடக் கூடுதலாக இருக்கலாம். அவை வெறும் சான்றிதழ்கள்தான்.
    சான்றிதழ்கள் மட்டுமே ஒருவனைச் சான்றோன் ஆக்குவதில்லை. சொல்லிக் கொடுத்த ஆசிரிய ஆசிரியைகளின் அரவணைப்பும் வாஞ்சையும் வழிகாட்டலும்தான் படித்தவனைப் பண்பாளனாக உச்சம் தொட வைக்கிறது. நான் என் ஆசிரியர்களின் தோளில் ஏறி நின்றுகொண்டுதான் வானம் பார்க்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால் படித்தவன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. 

உயர்ந்த வாத்யார் 
    தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாகச் செல்லும் வரிசை முறை உடையவை.  க, கா, கி, கீ … என உயிரெழுத்து வரிசை முறையைப் பின்பற்றி முதலில் க வரிசை, பின் ச வரிசை என்றவாறு கற்பிக்கப்பட வேண்டும். இயற்கைக்கு முரணாகச் சிந்திக்கிற காலம் இது. இப்போது தமிழ் நெடுங்கணக்கை க,ங,ச,ஞ, … என மேலிருந்து கீழாகச் சொல்லிக் கொடுத்து எழுத்துக் கற்பித்தல் வரிசையையே செயற்கையாக மாற்றிவிட்டார்கள். குழந்தைகள் தமிழ் எழுத்துருக்களை அடையாளம் காணமுடியாதபடி தடுமாறுவதற்கு இதுவும் ஒரு காரணம். 
     அதோ இன்னும் என் கண்முன்னால் ஒன்னாப்புக்கும் ரெண்டாப்புக்கும் நடுவில் பிரம்புடன் புறங்கையைக் கட்டியபடி நடைப் பயிற்சி செய்கிறாரே அவர்தான் அந்தோணிசாமி வாத்யார். குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாய்பாடு சொல்லிக் கொண்டிருக்கும்போது வாயில் எதையோ முணுமுணுத்தபடி நடப்பார். குட்ட வாத்தியார் எனப் பெரும்பாலோரால் அறியப்பட்டாலும் என் மனத்தில் உயர்ந்து நிற்பவர். ஒன்னாம் வகுப்பில் ஆனா ஆவன்னா சொல்லித்தந்து என் கண்ணைத் திறந்து வைத்தவர் அவர்தான்.
    ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்று ஓட்டுக் கட்டிடங்கள் இருந்தன. தெற்குப் பக்கம் உள்ள கட்டிடத்தில் முதல் மூன்று வகுப்புகள் செயல்பட்டன. 
       அந்தோணிசாமி வாத்யார் முதலில் உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சொல்லித்தருவார். அவை பரிச்சயமான பின்னர் கிழக்குச் சுவரில் இருந்த நீண்ட கரும்பலகையில் தமிழ் நெடுங்கணக்கைக் கட்டம் போட்டுக் கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டுவிடுவார். கொஞ்ச நாளில் மாணவர்கள் கையில் பிரம்பைக் கொடுத்து கரும்பலகையில் தொட்டுக் காட்டி இடமிருந்து வலமாக ஒவ்வொரு எழுத்தாகச் சொல்ல வைப்பார். இடையிடையே எழுத்துப் பயிற்சியும் நடக்கும். 
      பலருக்கும் வாயில் வர மறுக்கும் ழகரத்தை என் நாவில் எழுதிப் பழக்கியவர் அவர். அம்மா இங்கே வா வா, கை வீசம்மா கை வீசு, ஆத்தி சூடி ஆகிய பாடல்களைக் குழுவாக இழுத்து இழுத்து ராகம் போட்டுச் சொல்லுவோம். உருப்போட வைத்தது அந்தோணிசாமி வாத்யார்தான். பேச்சுத் தமிழில் இருந்து எழுத்துத் தமிழுக்கு எங்கள் கை பிடித்து அழைத்துப் போனவர் அவர்.
    ஆரம்ப எண் கணிதமும் கூட்டல் வாய்பாடுகளும் அத்துபடியானது அவரால்தான். ஏறு வரிசையில் ஒண்ணு, ரெண்டு…. சொல்வது எளிது. இறங்கு வரிசையில் சொல்ல கொஞ்சம் நாள் ஆகும். சொல்லும் வரை விடமாட்டார்.
கதை வாத்யார் 
      நாலாம் வகுப்பில் என்ன பாடம் எடுத்தார் கந்தசாமி வாத்யார் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர் சொன்ன கதைகள் இன்னும் கொம்புத் தேனாய் இனிக்கின்றன. அவரது பாடவேளை என்றாலே வகுப்பறையில் இருந்து மரத்தடிக்குப் போய்விடுவோம். பரந்த வெளியில் இதமான காற்றில் உட்கார்ந்து கதை கேட்பது என்றால் கேட்கவா வேணும். 
         வாத்யார் உட்கார மரத்தடிக்கு நாக்காலி வந்தவுடனேயே ஆவல் தொற்றிக் கொள்ளும். வணக்கம் போட்டு முடித்தவுடன் கதை சொல்லச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கி விடுவார்கள். கந்தசாமி வாத்யார் மூக்குப்பொடி டப்பாவை எடுப்பார். அப்படி எடுத்துவிட்டால் அன்றைக்குக் கதை உண்டு என்பது நிச்சயம். 
      என்ன கதை சொல்லலாம்? எனக் கேட்டுவிட்டு டப்பாவை ஒரு பார்வை பார்ப்பார். அதற்குள் பிள்ளைகள் மறுபடியும் நச்சரிக்க ஆரம்பிப்பார்கள். இருங்கடா… கத எங்கயோ ஒளிஞ்சுக்கிச்சு.. என்றபடியே டப்பாவை வலது ஆள்காட்டி விரலால் மூன்று தட்டுத் தட்டுவார். மூடியைத் திறந்தவாறு ஆங்… சிக்கிக்கிச்சு… என்று சொல்லி  ஒரு சிட்டிகை எடுத்து சர்… சர்… என இரண்டு மூக்கிலும் உறிஞ்சுவார். ம்ம்… கத வந்துருச்சு… என ஆரம்பிப்பார். 
          ராஜா ராணிக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், விலங்கு, பறவைக் கதைகள் என வகை வகையாய்ச் சொல்லுவார்.  அண்டரண்டாப் பச்சி கதைதான் ரொம்ப நீளம். ஆறேழு வாரங்களுக்கு நீளும். 
       கதையை இவர் சொல்கிறாரா அல்லது கதை தன்னையே சொல்லிக் கொள்கிறதா எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி கதை நடக்கும். மலைகளும் முகில்களும் கடல்களும் எங்களுக்கு இடையே லாவகமாய்ப் புகுந்து புகுந்து போகும். அரக்கன் அரக்கிகளின் அகோர உருவங்கள் வந்து வந்து பயம் காட்டும். அவர் படித்ததா கேட்டதா அல்லது அவரே அவ்வப்போது புனைந்து சொல்வதா எனத் தெரியாதபடி கதை சொல்வதில் சமர்த்தர்.
    நாலாம் வகுப்பில் செல்லையா வாத்யார் அறிவியல் போதித்தார். கோபக்காரர். ஆனால், புரியும்படி சொல்லித் தருவார். எனக்குக் கொஞ்ச நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் போனபோது நான் வீடு செல்லத் துணையாக எங்கள் பகுதியிலிருந்து பள்ளிக்கு வரும் சுப்பிரமணியை அனுப்பி வைப்பார். 

பாடகர் கோவிந்தன்
    ஆறாம் வகுப்பில் தமிழாசிரியர் கோவிந்தனை மறக்கவே முடியாது. பார்வையற்றவர். அருமையாகப் பாடுவார். தனியாக திருச்சியில் ஓர் இசைக்குழுவில் பாடகராக இருந்தார். சில மாதங்களுக்கு முன் பேருந்திலிருந்து இறங்கும்போது தவறி விழுந்து விபத்தில் இறந்துவிட்டார். 
       நாங்கள் படிக்கப் படிக்க அவர் விளக்கம் சொல்லுவார். புள்ளி புள்ளியாய்த் துளைகள் இடப்பட்ட ப்ரைலி புத்தகம் வைத்திருப்பார். அதைத் தொட்டுத் தொட்டு செய்யுள் நடத்துவதும் உண்டு. நாங்கள் அவருக்குத் தெரியாமல் அதைத் தடவிப் பார்ப்போம். ஒன்றும் பிடிபடாமல் முழிப்போம். ஏழாம் வகுப்பில் கொஞ்ச நாட்கள் வரைதான் அவரிடம் படித்தேன். 
       கரூர் மாவட்டதிற்கு எல்லை ஜெகதாபி. அடுத்தது திண்டுக்கல் மாவட்டம். அது லந்தக் கோட்டையில் தொடங்குகிறது. அங்கு அரசு உயர்நிலைப் பள்ளி வந்ததால் விருப்பம் உள்ளவர்கள் போகலாம் என்றனர். நான் லந்தக் கோட்டை சென்றேன்.

ஞானத் தந்தை
     எட்டாம் வகுப்பில் ராமசாமி சார்தான் வகுப்பாசிரியர். ஆங்கிலமும் வரலாறு புவியியலும் நடத்துவார். அவரது துணைவியார் மார்கரெட் சரோஜினி டீச்சர். நாங்கள் சரோஜா டீச்சர் என்றே அழைப்போம். அவர்கள் கணக்குப் பாடம் நடத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் நான் செல்லப்பிள்ளை. அவர்கள் பாடவேளையில் நிறைய வாயாடுவேன். தொல்லையாக எண்ணாமல் சரோஜா டீச்சர் என்னை விகடகவி எனச் செல்லமாக அழைப்பார்.
        ராமசாமி சார் முற்போக்கு எண்ணம் கொண்டவர். அவருக்கும் சரோஜா டீச்சருக்கும் மனமொத்த திருமணம். அவர்களுக்குப் பெண்குழந்தைதான் உண்டு. அந்த அக்கா எங்கோ வெளியூரில் படித்துக்கொண்டிருந்தார். என்னை அவர்களது மகனாக நடத்தினார்கள். ஓரிரு முறை அவர்களது வீட்டிற்குப் போனது உண்டு. அப்போது டீச்சர் தண்ணீர் கலக்காத பாலில் மணக்க மணக்க காஃபி போட்டுத் தருவார்கள். என் பிள்ளைப் பருவத்தில் அப்படியொரு காஃபியைக் குடித்துப் பார்த்ததே இல்லை. (எங்கள் வீட்டில் வறக் காப்பிதான்).
     என் அக்காவை எட்டாவதோடு நிறுத்திவிட்ட அப்பா ஒரு முடிவுக்கு வந்திருந்தார். நாலு குழந்தைகளையும் படிப்பில் சமம் ஆக்கிவிடுவது என்ற ‘நல்ல’ முடிவுதான் அது. என்னையும் எட்டாவதோடு நிறுத்தி விடுவதாகச் சொல்லிக் கலக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ராமசாமி சாரிடம் இதைச் சொல்லி நான் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் ஒருநாள் அப்பாவை அழைத்துவரச் சொன்னார். போனோம். 
    முதலில் சார் வேலை பார்த்த இடம் போன்றவற்றை எல்லாம் பேசி அப்பாவை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். பிறகு என் படிப்பைப் பற்றிப் பேசினார். நான் நன்றாகப் படிப்பதால் தொடர்ந்து படிக்க வைக்குமாறும் பத்தாம் வகுப்பு வரை அந்தப் பள்ளியிலேயே உள்ளதால் அதுவரையேனும் பையன் படிக்கட்டும் என்றும் சாரும் டீச்சரும் பலவாறு அப்பாவை சமாதானப்படுத்தினார்கள். பேசிச் சமாளிக்க முடியாமல் திகைத்துப் போன அப்பா அரை மனசோடு சம்மதம் சொல்லிவிட்டு வந்தார்.
   லந்தக் கோட்டையில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்வுக்கு வழியனுப்பும்போது சரோஜா டீச்சர் ‘நீ இந்த மாவட்டத்துக்கே கலெக்டரா வரணும். நான் பார்க்க பெரிய ஆளா வரணும்’ என்று வாழ்த்தி வழியனுப்பினார்கள். இன்று நான் பெரிய ஆளாக வந்திருப்பதைப் பார்க்க அவர்கள் இல்லை. என் ஆசிரியர் ராமசாமி சார் மட்டும்தான் இருக்கிறார். எனது ஞானத்தந்தை அவர். எனது ஒவ்வொரு உயரத்தையும் பார்த்து உச்சிமோந்து ஆனந்தக் கண்ணீர் விடுவார்.

உச்சரிப்பு உடற்கல்வி ஆசிரியர்
      பி.ஈ.டி. தண்டபாணி சாரை உடற்கல்வி ஆசிரியர் என்றே சொல்ல முடியாது. வேட்டிதான் அதிகம் உடுத்துவார். உடற்கல்வியை விட அவர் சொல்லித் தந்தது தமிழ் உச்சரிப்பைத் தான். இது எந்தத் தமிழாசிரியரும் செய்யாதது. 
        ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உடற்கல்வி ஆசிரியரும் பதிலியாக வகுப்புக்கு வருவதுண்டு. வந்ததும் அறிவியல் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொல்லுவார். அதில் வரும் அறிவியல் செய்திகளை  விவாதிப்பாரா என்றால் அதுதான் இல்லை. சொற்களின் இடையிடையே வரும் ல, ள, ழ மற்றும் ண, ந, ன வேறுபாடுகளை உச்சரித்துக் காட்டுவார். எங்களையும் உச்சரிக்க வைப்பார். சரியாக உச்சரிக்காத வரைக்கும் விடமாட்டார். அதே பகுதியைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லுவார்.
      அவர் இருந்த காலத்தில்தான் முதன் முதலில் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும். ஆண்டு விழாவில் முக்கிய வேலைகளை அவர்தான் கவனித்தார். உடன் படித்த கூடலூர் பெரியசாமி தலைமையில் கட்டபொம்மன் நாடகம் போட்டோம். பெரியசாமிதான் கட்டபொம்மன். நான் ஜாக்சன் துரை. வசனம் மறந்துபோனால் மறைவில் இருந்துகொண்டு உடனுக்குடன் எடுத்துக் கொடுப்பார் தண்டபாணி சார். 
       படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தால் மட்டும் போதாது. உடற்கல்வியிலும் சில சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். அது அரசு வேலைக்குப் போக உதவும் என்பார். என்னைக் கபடி டீமில் சேர்த்துவிட்டார். சப்ஸ்டிடியூட் வீரர்களில் ஒருவனாக என்னையும் விளையாட வைத்து சான்றிதழ் பெற வைத்தார்.

நாகராஜன் சார் 
     பத்தாம் வகுப்பு வந்தபோது நாகராஜன் சார் அறிவியல் பாடம் நடத்தினார். பிரம்மச்சரியாக வந்த அவர் தனியாக அறை எடுத்துத் தங்கியிருந்தார். அவரது ஹார்லிக்ஸ் பாட்டில் அறைக்கு வரும் மாணவர்களால் சீக்கிரம் தீர்ந்து போகும். நான் போட்டுக் கொடுத்தாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார். ‘சின்னப் பசங்க… போறான் விடு’ என்பார்.

      சின்னச் சின்ன டெஸ்ட் நிறைய வைப்பார். இரவுப் படிப்பு நடத்தினார். நான் ஆறேழு மைலுக்கு அப்பால் பொம்மனத்துப் பட்டியிலிருந்து தினமும் போக வேண்டும். முயன்றேன். களைத்துப் போனேன். அவர்தான் வாரம் ஒருநாள் வந்தால் போதும் என அறிவுரை கூறினார். நீ படித்துக் கொள்வாய். உனக்கெல்லாம் இது தேவையில்லை என்றார். 

நடக்கக் கூடாதது
      நாராயணன் சார் ஆங்கிலம் கற்பித்தார். எஸ்ஸே, பாரகிராஃப், கட்டுரை எல்லாவற்றையும் கரும்பலகையில் என்னைத்தான் எழுதிப் போடச் சொல்லுவார். அவர்தான் வகுப்பாசிரியர். ரேங்க் கார்டும் நான்தான் எழுதித் தருவேன். வெளியூரிலிருந்து வருவதால் சில சமயங்களில் வாரத்தின் முதல் நாள் மட்டும் 9.30க்கு அவரால் வர முடியாது. வெள்ளிக் கிழமை மாலையிலேயே ஏதாவது ஒரு வேலை கொடுத்து திங்கள் கிழமை காலையில் வந்ததும் வகுப்பு மாணவர்களிடம் எழுதி வாங்கும்படிச் சொல்லிவிட்டுப் போவார். 
    மற்றவர்களை மேற்பார்வை செய்துகொண்டே நானும் எழுத வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வாத்யார் வேலைக்கு மட்டும் வந்துவிடக் கூடாது என மனசுக்குள் கோடு போட்டுக் கொண்டேன். ஆனால், காலச் சுழலில் சிக்கி நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இருப்பினும் பிற்காலத்தில் நான் ஆசிரியர் ஆனபோது அவர் கொடுத்த பயிற்சி பெரிதும் பயன்பட்டது.

வாத்யார் சாபம் பொல்லாதது 
    தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் கணிதம் போதிப்பதில் கில்லாடி. பெரியகுளம் பக்கம் அவரது ஊர். ஒரு பயிற்சியையும் விடமாட்டார். அவர் வெளியில் நின்றாலே போதும். வகுப்பே கப்சிப் ஆகிவிடும். 
      அவரது வகுப்பு இறுக்கமாக இருக்கும். தலைமை ஆசிரியர் என்பது ஒன்று. எப்போது எந்த சூத்திரத்தைக் கேட்பாரோ என்ற பயம் வேறு. சொல்லாவிட்டால் அருள் பொழியவில்லையே என என்னைச் சீண்டுவார். தேன் ஒழுகவில்லையே எனத் தேனம்மாளையும் நாகம் படம் எடுக்கவில்லையே என நாகராஜனையும் குத்திக் காட்டுவார். நீ நூறு மார்க் வாங்க மாட்ட போலிருக்கே என்று சொல்லுவார். நாங்கள் நூறு மார்க் வாங்க வேண்டும் என்பதைத்தான் இப்படி எதிர்மறையாக அடிக்கடி வலியுறுத்துவார்.
தேர்வு எழுதி முடிக்கும் வரை 100 வந்துவிடும் என இறுமாப்புடன் இருந்தேன். எழுதி முடித்து வெளியே பேருந்து நிறுத்தத்திற்கு வருவதற்குள் ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்றுக்குத் தவறான விடை எழுதிவிட்டு வந்திருப்பதை அறிந்து அழுதேன். 
    பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த போதும் மோகன்தாஸ் சார் சாபமிட்டபடியே கணிதத்தில் 99 தான் வந்தது. ஆசிரியர்களின் எதிர்மறை எண்ணங்கள் பலித்துவிடும் என நம்பும்படி ஆயிற்று என் அனுபவம். மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் நல்ல ஆசிரியர். கற்பித்தலில் சிறந்த ஆசிரியர். இருந்தும் அவர் கசப்பான அனுபவத்தையே ஏற்படுத்தினார்.

ஆல் இன் ஆல் ஆபிரகாம் சார்
    பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு உப்பிட மங்கலத்தில் படித்தேன். உப்பிட மங்கலத்தில் ஆபிரகாம் சுபாஸ் சந்திர போஸ் ஆங்கிலம் போதித்தார். அவர்தான் மனப்பாடம் செய்யாமல் சொந்தமாக ஆங்கிலத்தில் எளிதாக நாலு வரி எழுதச் சொல்லித்தந்தவர். 
    பழமொழிகளை விளக்கும் சின்னச் சின்னப் பத்திகளை ஆங்கிலத்தில் இயல்பாக எழுதும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கேள்வியில் இருந்தே பதில்களை வரவழைக்கும் வித்தையை உணர்த்தினார்.
    பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்திற்கு அவரிடம் டியூசன் சேர்ந்தேன். தேவையான கணக்குகளை மட்டும் போடச் சொல்லுவார். டியூசனுக்குப் பணம் தரத் தாமதம் ஆனாலும் கடிந்துகொள்ள மாட்டார். அவர் இளங்கலையில் இயற்பியல் பட்டதாரி என்பதால் இயற்பியல் டெஸ்டும் எழுத வைப்பார். கடைசித் தவணை டியூசன் ஃபீஸ் தராத போதும் வேறுபாடு காட்டாமல் பழகினார். நான் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தபோது தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு அவர் கருவி நூலாகப் பயன்படுத்திய உளவியல் கோட்பாடுகள் (சந்தானம்) புத்தகத்தைப் பரிசாகத் தந்தார்.

கெட்டிக்காரர் கிருஷ்ணமூர்த்தி
    பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வந்தபோது நான் இரண்டாமிடம்தான் பெற்றேன். ஆனாலும் இயற்பியலில் நான்தான் முதல் மதிப்பெண். அதுவரை எதுவும் சொல்லாத இயற்பியல் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மகிழ்ந்துபோனார். அதுவரை அவரது அனுபவத்தில் என்னுடையது தான் அவரது மாணவர் ஒருவர் பெற்ற உயர்ந்த பட்ச மதிப்பெண். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூட அந்த மதிப்பெண் முறியடிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவர். 
          தன் பாடத்தில் கெட்டிக்காரர்.  என்னென்ன படித்தால் என்ன வேலைக்குப் போகலாம் என்பதை உற்சாகத்தோடு சொல்லுவார். இயல்பில் நல்ல மனிதர். தனிப்பட்ட முறையில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். 

நிறுவனம் மட்டுமே புதிது
     பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபின் பொறியியல் கல்லூரிக்குப் போகக் கலந்தாய்வுக்குத் தேர்வு பெற்றேன் இருந்தும் குடும்பச் சூழ்நிலையால் கரூர் அரசு கலைக் கல்லூரியில்தான் சேர நேர்ந்தது. ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்ததால் உடனே கல்லூரியிலிருந்து விலகி மாயனூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர நேரிட்டது தனிக் கதை.
      மாயனூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாக மாறிய நிலையில் முதல் குழுவாக நாங்கள் சேர்ந்தோம். முதியோர் இல்லம் போல இருந்த நிறுவனத்திற்கு இளைய விரிவுரையாளர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்திருந்தார்கள். ஒருங்கிணைந்த (கரூர், அரியலூர், பெரம்பலூர்) திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் ஒரே நிறுவனமாகச் செயல்பட்டது.
     புதிய பாடத் திட்டத்தின்படி மாயனூரில் சேர்ந்த மாணவ மாணவியர்கள் எல்லாம் தர அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதனால் எங்களைச் சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறிப்போனார்கள்.   இரண்டு ஆண்டுகளை முடித்து வைத்து எங்களை வெளியே அனுப்புவதற்குள் திண்டாடிவிட்டார்கள். எங்களைப் பழிவாங்கும் விதத்தில் குறிப்பாக சிலருக்கு அக மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டார்கள்.

சரியான வழிகாட்டி 
        ஒரே ஆறுதல் நடராஜன் சார். வளர்ந்து வரும் இந்தியாவில் கல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குறித்துப் பாடம் எடுத்தார். நிறைய ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வகுப்பு நடத்தினார். அமனஷ் வீலியின் குழந்தைகள் வாழ்க போன்ற ரஷ்யப் புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். எனக்கு எதில் ஈடுபாடு, என்னால் எது முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. 
        ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் எனத் தமிழாசிரியர் அரங்கநாதனிடம் ஆலோசனை கேட்டபோது பி.எஸ்.ஸி கணிதத்தைப் படிக்குமாறு கூறினார். டியூசன் வைக்க வசதியாக இருக்கும் என்றும் சிரமப்படாமல் வாழ்க்கை நடத்தலாம் என்றும்  தான் பட்ட பணப் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். தான் படும் துன்பம் தன் மாணவனுக்கு வந்துவிடக் கூடாதே என்ற அக்கறையில் பொருளியலை நோக்கி வழிகாட்டினார்.
      நடராஜன் சாரோ நீ நன்றாகப் பேசுகிறாய், கவிதை எழுதுகிறாய், ஓரளவு புத்தகங்கள் படிக்கிறாய். எனவே பி.லிட். தமிழை எடுத்துப் படி. அதைப் படித்தால் பதவி உயர்வுக்கு பி.எட். தேவையில்லை என்றார். அதுமட்டும் அல்லாமல் நேரடியாகக் கல்லூரியில் சேர்ந்து படிக்காமல் தொலை தூரக் கல்வி முறையில் படி. இடையில் வேலை கிடைத்தாலும் படிப்பைப் பாதியில் விடவேண்டிய அவசியம் இருக்காது எனக் காரண காரியங்களுடன் எடுத்துரைத்தார். 
     இன்று நான் அஞ்சல் வழி மற்றும் பகுதி நேரப் படிப்பில் சேர்ந்து தமிழில் முனைவர் பட்டம் வரை பெற்றிருப்பதற்கு ஒருவகையில் காரணகர்த்தா நடராஜன் சார்தான். எந்த மாணவனுக்கு என்னவாறு வழிகாட்ட வேண்டும் என்பதை அறிந்து சொல்லும் ஆசிரியருக்குச் சரியான உதாரணம் நடராஜன் சார். அவருக்கு என் வந்தனம்.

கடந்துபோக அனுமதிப்போம்
   நான் படித்த கல்விச் சாலையில் பணியாற்றியபோதும் சிலர் எனக்கு ஆசிரியர்களாக இல்லை. சில ஆசிரியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை அல்லது என் நினைவில் நிற்கும் அளவிற்கு ஏதும் செய்தவராக இல்லை. சிலர் செய்தது மறக்கக்கூடியதாக இல்லை. சிலரைப் பற்றிச் சொல்வது அவ்வளவு நாகரிகம் இல்லை.
    நானும் சிலகாலம் ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள். என்னைப் பற்றியும் என் மாணவர்கள் கருத்துச் சொல்லவும் கடந்து போகவும் முழு உரிமை உண்டு. அவர்களுள் எவராவது ஒருவரின் வாழ்நாளில் அவர்கள் நினைத்துப்பார்க்கும் விதமாக நான் நடந்துகொண்டிருந்தால் அது என் ஆசிரியர்கள் எனக்குத் தந்த சீதனம்.  
      இன்று விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் இருக்கிறேன். விருதுக்கு விண்ணப்பிப்பவர்களை எனது ஆசிரியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். என் முன்னிலையில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களில் எனது ஆசிரியர்களை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் விருதுகளுக்கு அப்பாலும் இருக்கக் கூடும்.
    நம் மாணவர்களுக்கு நம் ஆசிரியர்களால் நமக்குக் கிடைத்த வாழ்க்கையைக் காட்டிலும் மேலான வாழ்வு கொடுப்பதுதான் நமது மகத்தான பணி. எட்வர்ட் செயித் சொன்னதுபோல தனது மாணவர் தன்னைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கிற ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இது சமர்ப்பணம்.

அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
05.09.14 
நன்றி: காக்கைச் சிறகினிலே செப். 2014


6 comments:

  1. சிறந்த ஆசிரியர்களிடம் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற,
    சிறந்த ஆசிரியராக 18ஆண்டுகள் பணிபுரிந்த,
    சிறந்த ஆசிரியர்களை இனம்கண்டு ஊக்குவிக்கும் -
    சிறந்த அலுவராகத் திகழும் தங்களுக்கு
    எங்கள் ஆசிரியர்தின நல்வாழ்த்துகள் அய்யா.
    (அலுவலராகவும் நல்லவராகவும் தொடர்வது கடினம். அது தங்களைப் போலும் வல்லவராலேயே இயலக்கூடியது.
    நல்லவன் வாழ்வான் படத்தில், எம்ஆர்ராதா கேட்பார்- “ ஜேம்சு இது எப்படிடா முடியுது உன்னால?”பணக்காரனாவும் இருந்துகிட்டு நல்லவனாவும் இருக்கியேடா?” இந்த சந்தேகம் பலமுறை, தங்களைப் பார்க்கும்போது எழுவது உண்டு. இதை “அலுவலராகவும், இலக்கியவாதியாகவும்..“ என்றும் எடுத்துக் கொள்ளலாம்.. தவறாக இருந்தால் மன்னியுங்கள் அய்யா.

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா
    ஆசிரியர்களுக்கு மகுடம் சேர்க்கும் அற்புதமான கட்டுரை. தங்கள் ஏறுமுகத்திற்கு ஏணிப்படியாக இருந்தவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி முகமாகவே இக்கட்டுரையைப் பார்க்கிறேன். பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி பாடப்பிரிவைத் தேர்ந்தெடு. ஆசிரியர் பயிற்சியில் சேர் அது தான் உன் குடும்ப சூழ்நிலைக்கு சரியாக இருக்கும் என்று எனக்கு வழிகாட்டிய எனது ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் முகத்தைத் தான் தங்கள் ஆசிரியரான திரு.நடராஜன் அவர்களிடமும் கண்டேன். பி.லிட் படிப்பு கூட பதவி உயர்வுக்கு உதவும் என்று வழிகாட்டுதலால் தான் நானும் படித்தேன். ஒரே மாதிரியான குடும்ப சூழலிலும், கல்வித் தகுதியைப் பெற்றதிலும் இருவரும் ஒத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அய்யா. தங்களின் நட்பு எனக்கு வழிகாட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. உணர்வு பூர்வமான கட்டுரை ஆசிரியர் தினத்தில் தந்து நல்லாசிரியர்களுக்கு மகுடம் சேர்த்திருக்கீறீர்கள். மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. அய்யா,
    வணக்கம்.
    தங்களது பள்ளிப் பருவமும் ஆசிரியர்களும் தங்கள் பதிவுகளில் உயிர்பெற்று உலாவுகிறார்கள்.
    எனக்குத் தெரிந்த, நான் படித்த ஆசிரியர்களின் முகங்களை அவர்களது பிம்பத்தில் ஒட்டிக்காண்கிறேன்.
    “என் திசைகளுக்குச் சிறகுகள் முளைக்க வைத்த“
    “நான் என் ஆசிரியர்களின் தோளில் ஏறி நின்றுகொண்டுதான் வானம் பார்க்கிறேன்“
    “மலைகளும் முகில்களும் கடல்களும் எங்களுக்கு இடையே லாவகமாய்ப் புகுந்து புகுந்து போகும். அரக்கன் அரக்கிகளின் அகோர உருவங்கள் வந்து வந்து பயம் காட்டும்.“
    என்பன போன்ற வரிகள் தங்களின் கவித்துவம் காட்டுவன.
    நிற்க
    எனக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் மலையளவு வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு சில பொதுமைகளைக் காண்கிறேன்.
    பத்தாம் வகுப்பில் இதே போல “ உந் திமிருனாலேயே நீ 100 மார்க் எடுக்க மாட்டடா“ என்று ஆசிரியரிடத்து சாபம் பெற்று உங்களைப் போலவே நன்கு தெரிந்த வினாவிற்கு தவறான விடை தேர்ந்து நூறெடுக்க முடியாமல் போனவன் நான்.
    மேனிலைக் கல்வியில் கணிதத்தில் முதலிடம் பெற்ற போதும் பள்ளி அளவில் உங்களைப் போலவே இரண்டாமிடத்தையே பெற முடிந்தது.
    நுழைவுத் தேர்வில் பொறியில் படிக்கத் தேர்வாகி, ஆசிரியரானால் நிறையப் படிக்கலாம் என்ற எண்ணத்தில் மாயனூர் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் உங்களுக்குப் பின் படித்தேன்.
    என் திமிர் முற்றும் தொலைந்து போய் நான் படிக்க வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று எனக்குக் காட்டிய, பெரம்பலூர், கரூர் , அரியலூர், திருச்சி ( அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் ) பகுதிகளிலிருந்து வந்திருந்த முதல்தர சக மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களைக் காட்டிலும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்கள்.
    நீங்கள் படித்த அதே ஆசிரியர் சிலரிடத்தும் நான் படித்திருக்கிறேன்.
    என்னையும் கணிதம் படி என்று நெறிப்படுத்திய ஆசிரியரும் அவர்களுள் ஒருவர்!
    தங்களின் பகிர்வில் ஒன்றினேன்.
    நன்றி!

    ReplyDelete
  4. எங்கள் பள்ளியின் மாணிக்கமாகத் திகழும் ஐயா அவர்களுக்கு வணக்கம். மாணவர்கள் பலர் தங்கள் ஆசிரியர்களில் சிலரை நினைத்துப் பார்ப்பது போல், ஆசிரியர்கள் தம்மிடம் பயின்ற மாணவர்களில் சிலர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவதை அறிவேன். எந்த அளவிற்கு அம்மாணவன் ஓர் ஆசிரியரின் பணிக்காலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும்?
    ஐயா நேற்று 17/9/2014 தொழில் வரி செலுத்த லந்தக்கோட்டை கடைவீதி வழியில் சென்று கொண்டிருந்த போது உங்கள் ஆசிரியர் திரு. இராமசாமி ஐயா அவர்களைச் சந்தித்தேன். நலம் விசாரித்த பின்பு அவர் சொன்னது உங்களைப் பற்றித் தான். உங்களின் பணி நெருக்கடி, புத்தாண்டிற்குப் பின்பு சந்திக்க முடியாத அளவு தாங்கள் இருக்கும் நிலையை அவர் எடுத்துக் கூறினார். “உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்” என்பதற்கிணங்க இங்கே உங்கள் பதிவில் அவர்; அங்கே அவர் மனப்பதிவில் நீங்கள். வியப்பாக உள்ளது ஐயா. இந்தப் பதிவில் நானும் என்னுடைய பள்ளித் தமிழாசிரியர் திரு.சுரேந்திரன் மற்றும் எனது இலக்கணப் பேராசிரியர் திரு.பொன்.விசயன் அவர்களைக் கைகோத்து நடக்கிறேன். ஆசிரியர் என்பவர் வழி காட்டும் மைல் கல்லாக இருக்க வேண்டும் என்பதை அழகாகச் சுட்டியுள்ளீர்கள். உங்களின் நடராசன் ஆசிரியர் போல் எனக்கு தியாகராசர் ஆசிரியர் கல்லூரியின் சரஸ்வதி அம்மா. உண்மையில் அவர்கள் கலைமடந்தையே. அவர் தான் எனக்குத் தொடர்ந்து படிக்கத் தூண்டியவர். உண்மை தான் ஐயா. நம் ஆசிரியர்களின் தோள் மீது ஏறித்தான் நாம் உயரம் காண்கிறோம். நீங்கள் படித்த பள்ளியில் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. இங்குப் படிக்கும் சில மாணவர்களைப் பார்க்கும் போது உங்களின் முகமே எனக்குப் பதிகிறது. என்னுடைய ஆசிரியர்களை அடுத்து எனக்கு முன்மாதிரியாகத் திகழும் உங்களையும் உங்கள் ஆசிரியரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி ஐயா. குருவே சிறந்த திரு!

    ReplyDelete
  5. //மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் நல்ல ஆசிரியர். கற்பித்தலில் சிறந்த ஆசிரியர். இருந்தும் அவர் கசப்பான அனுபவத்தையே ஏற்படுத்தினார்.//
    பாடம் சொல்லியவரிகள்
    நன்றி அய்யா

    ReplyDelete
  6. இவ்வாறாக நினைவு வைத்து எழுதுவது என்பது மிகவும் சிரமமான காரியம். தங்களின் எழுத்தும், உணர்வும் எங்கள் மனதினைத் தொட்டுவிட்டன.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்