வருகையின் பதிவுகள்

     புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இசை மேதைகள், சமயச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேரறிவாளர்கள் பலருடைய பாதம்பட்ட இடமாகும். இப்பள்ளியின் பார்வையாளர் பதிவேடே இதற்கான சான்று.
   கொப்பனாபட்டி அ.மெ. மெய்யப்பச் செட்டியார் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ராமநாதன் கல்லூரி என்னும் மகளிர் பள்ளியைப் பார்த்து வந்தார். அதே போல் தம் பகுதியிலும் ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் எனக் கருதிய அவர் 1935 (பின்னாளைய ஆசிரியர் தினம்) செப்டம்பர் 5-ம் தேதி, பெண் குழந்தைகளுக்காகக் கலைமகள் கல்லூரி என்னும் பெயரில் உண்டு உறைவிடப் பாடசாலையைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகக் கல்வி நிறுவனம் ஏற்படுத்த மிகுந்த துணிச்சல் வேண்டும்.
  இது முதலில் அவரது இல்லத்தின் ஒரு பகுதியில் பெண்கள் குருகுலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. 1939-ம் ஆண்டு வாக்கில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் கலைமகள் திருவுருவத்துடன் கூடிய வழிபாட்டு மண்டபம், நூலகம், கல்லூரிக் கட்டிடம், மாணாக்கர் உறையுள், உண்டிச் சாலை, அடுக்களை, பாற்பசுச் சாலை, பண்ட சாலை, ஆசிரியைகள் தங்குமிடம், விருந்தினர் இல்லம், விளையாட்டிடம், வைத்திய சாலை ஆகிய கட்டமைப்பு வசதிகளுடன் படிப் படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல துறைக் கல்வி
    இங்கு தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மட்டுமன்றி ஆங்கிலம், கணக்கு, இயற்கை நூல், பொது அறிவு, வாய்ப்பாட்டு, வீணை முதலான சங்கீதம், பின்னல், தையல், சமையல் முதலியனவும் கற்பிக்கப்பட்டுள்ளன. 3 முதல் 8 வரை ஆறு வகுப்புகளும் பின்பு கலைச்செல்வி அதற்கு மேல் கலைமணி என்னும் பெயர்களில் தலா இரண்டாண்டு வகுப்புகளும் நடை பெற்றுள்ளன.
அதே பெயர்களில் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏழு பெண் குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இப்பாடசாலைக்குப் பண்டிதமணி (11.01.1936) வந்திருந்தபோது ஐந்தாம் வகுப்பு வரை 14 பேர் பயின்று வந்துள்ளனர். ஒருமுறை திரு.வி.க. இங்கு வந்திருந்தபோது (3.11.1947) 200 பேர் படித்து வந்துள்ளனர். வெள்ளி விழாவின்போது (1960) 142 பேரும் கல்வி பயின்றுள்ளனர். தற்போது இங்கே 276 பேர் படித்து வருகின்றனர்.
அறிஞர்களின் நினைவில்
   இரண்டாவது தடவையாக உ.வே.சா., கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்கு 1939-ல் இங்கு வந்துள்ளார். அப்போது அவர் ஆற்றிய உரை வெள்ளிவிழா மலரில் இடம்பெற்றுள்ளது. அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற (19.3.1961) வெள்ளிவிழாவில் தெ.பொ.மீ. (முதலில் வந்தது 12.12.1947), கி.வா.ஜ., பொள்ளாச்சி நா.மகாலிங்கம் முதலானோர் கலந்துகொண்டுள்ளனர்.
   கி.வா.ஜ. முதன்முறை வந்தபோது (23.3.48) அறுசீர் விருத்தமும் அடுத்தமுறை எண்சீர் விருத்தமும் பாடியிருக்க, கிருபானந்த வாரியார் (26.6.64) நேரிசை வெண்பா பாடியுள்ளார். லேனா தமிழ்வாணன் இங்கு படித்த தன் தாயார் மணிமேகலை தமிழ்வாணன் வாயிலாகத் தான் பெற்ற தமிழறிவு குறித்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தான் வந்த தேதியை 31.6.2004 எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். (ஜூன் மாதத்துக்கு 31-ம் தேதி இல்லை) ராஜாஜி, ராய.சொக்கலிங்கம், நீ.கந்தசாமி, டாக்டர் முத்துலட்சுமி, ந.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதி, ஸங்கீத ரத்னாகரம் அரியக்குடி ராமானுஜய்யங்கார், வீணை சாம்பசிவய்யர், டாட்டன்ஹாம், சித்பவானந்தர், விபுலானந்தர், அகிலன், (சிட்டி) பெ.கோ.சுந்தரராஜன், சோமலெ, நெ.து.சுந்தரவடிவேலு, சிட்டிபாபு, வெ.சாமிநாத சர்மா, மாயாவி முதலானோர் இங்கு வருகை தந்துள்ள மற்ற பிரபலங்கள் ஆவர்.

விபுலாநந்த அடிகள் வருகைக் குறிப்பு
   பார்வையாளர் பதிவேட்டில் மேற்கண்டவற்றைத் தவிர சிலரது கடிதங்களும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வி நிறுவனத்தை நேரில் பார்த்துவிட்டுச் சென்றவர்கள் தாம் கண்டு வியந்ததையும், சிலர் தாம் கேள்விப்பட்டதையும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
உ.வே.சா-வின் கடிதம்
     கலைமகள் சிலை திறப்பு விழாவுக்கு வந்துசென்றவுடன் சென்னையில் இருந்து உ.வே.சா. ஒரு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி (25.04.1948) தான் கல்கத்தாவில் இருப்பதாகவும் தன்னால் பட்டமளிப்பு விழாவிற்கு வர இயலாத காரணத்தால் தனக்குப் பதிலாகத் தன் நண்பர் ரசிகமணி டி.கே.சி-யை அனுப்புவதாகவும் அவரை வைத்து விழாவை இனிதே நடத்துமாறும் தெரிவித்துள்ளார். அவரே பிறிதொருமுறை (02.09.1948) அமைச்சர் ராஜன் மற்றும் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவுக்குப் புதுடெல்லியில் இருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
   என்.எஸ். கிருஷ்ணன் தன் துணைவியார் டி.ஏ.மதுரம் இங்கு வந்திருந்தபோது (09.09.1956) நடத்தப்பட்ட ஓரங்க நாடகத்தையும் அவர் மீது காட்டிய அன்பையும் நினைவுகூர்ந்து வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
குறிப்பிடத்தக்க ஆவணம்
   கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் பார்வையாளர் பதிவேடு இங்கு வருகை தந்த/ கடிதம் எழுதிய உ.வே.சா. முதலிய ஜாம்பவான்களின் கருத்துகள், பாடசாலையின் அமைப்பு, பாடத்திட்டம், பிற செயல்பாடுகள், கற்பித்த ஆசிரியர்கள், கல்வி பயின்ற பெண்மணிகள் முதலிய தகவல்களை அறிவதற்கான குறிப்பிடத்தக்க ஆவணமாக விளங்குகிறது.
நன்றி: http://tamil.thehindu.com 02.11.2014

7 comments:

  1. விபுலாநந்த அடிகளின் கையெழுத்து கண்டு மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  2. விஜயை, அஜீத்தை தனுசை தெரிந்த சமூகத்திற்கு விபுலானந்தர் என்கிற பெயரை அறிமுகம் செய்வதே பெரும் சேவைதான் ...
    நன்றி அய்யா ... இவர் பற்றி விக்கியில் தேடுகிறேன்
    தேடவைத்த பதிவு.. நன்றி
    த.ம ஒன்று

    ReplyDelete
  3. தமிழர்கள் பண்டைப் பெருமையிருந்தும் அதைப் பேணிப் பாதுகாக்கும் வரலாற்றுணர்வற்றவர்கள் எனும் மேலைநாட்டினரின் குற்றச்சாட்டுச் சரிதான் அ்ய்யா. பழந்தமிழரிடையே புகழ்பெற்றிருந்து மறைந்த இசைக்கருவியாம் யாழ் பற்றிய “யாழ்நூல்“ தந்த விபுலாநந்தர் குறிபபில் கண்டுள்ளபடி இப்பள்ளியில் அரியதொரு நூலகமும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நாம் அவற்றைத் தொலைத்துவிட்டோம் என்பதன் சான்றே இக்குறிப்பாகப் படுகிறது. தங்களின் தூண்டுதலால் இதுபோலும் தொன்மைக் குறிப்புகளை மீட்டெடுத்தால் இளைய தலைமுறைக்காவது வரலாற்றுணர்வு வரப்பெறலாம். தங்கள் வரலாற்றுப் பயணமே ஒரு வரலாறாகட்டும். தொடருங்கள் அய்யா, நாங்கள் துணைநிற்போம். நன்றி வணக்கம்.

    ReplyDelete
  4. ஓர் அரிய பதிவு. நாங்கள் அறியாதனவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவ்வாறான பதிவுகளே நமது வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்பனவாகும்.

    ReplyDelete
  5. அய்யா.அரிய செய்திகள்.!
    "வித்தகன் கைப்பட்டால் விறகுக் கட்டைகூட வீணையாகும்"என்பார் மேத்தா.
    தாங்கள் மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
    நாங்கள் எப்போதும் உங்களோடு கைகொடுப்போம்.
    'கலைமணி',கலைச்செல்வி' பட்டங்கள் நல்ல செய்தி.
    லேனா தமிழ்வாணன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செய்த தவறை ஒரு ஆய்வாளராக நேர்த்தியாகச் சொன்னவிதம் அருமை.
    அலுவலகப் பணியோடு,ஆய்வுப் பணியும் தொடரட்டும்! நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா
    புதிய தகவல் ” தி இந்து” நாளிதழில் படித்தேன்...பள்ளியின் பாரம்பரியம் வியக்க வைக்கின்றது.அதிலும் பெண்களுக்காக துவங்கப்பட்டது என்பதை அறியும் போது மகிழ்வாக உள்ளது. உ.வே.சா,பண்டிதமணி.திரு.வி.க போன்றவர்களின் வருகையால் சிறப்படைந்துள்ள பள்ளி என்ற பெருமையை உணர்ந்தேன்..நன்றி

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா. பல பள்ளிகளில் பார்வையாளர் பதிவேடு வெற்றுக் காகிதங்களாக உள்ளது. கொப்பனாப்பட்டியில் உள்ள மு.நா.செ. உயர்நிலைப்பள்ளியில் உள்ள பார்வையாளர் பதிவேட்டில் நெ.து.சு., காமராசர் போன்ற பலர் வந்து பள்ளி நிகழ்வுகளில் பங்கெடுத்தமை பற்றிய பதிவுகளைக் கண்டுள்ளேன். அதே போலக் கலைமகள் கல்லூரி மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் வரலாற்றுப் பெட்டகமாகப் பார்வையாளர் பதிவேடு இருப்பதைத் தங்கள் பதிவில் அறிந்து கொண்டேன். தங்களது வரலாற்றியல் ஆய்வு தொடரட்டும். நன்றி ஐயா.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்