குணவீர பண்டிதர்: சொன்னதும் செய்ததும்


       
Dr .N. ARULMURUGAN

      அச்சில் வருவதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. அவர்களைப் பொறுத்தவரை காதுக்கு வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை; கேள்விக்கு அப்பாற்பட்டவை. அவர்கள் புழக்கத்திலுள்ள இலக்கிய இலக்கண வரலாறுகளையும் இப்படித்தான் அப்பட்டமாக நம்புகிறார்கள். அன்றாடச் செய்திகளில் உண்மைக்கு எவ்வளவு இடம் உள்ளதோ அதற்குச் சற்றுக் கூடுதலான இடமே பெரும்பாலான வரலாறுகளிலும் உள்ளது. இவ்வாறு வரலாறுகளில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதற்கு அவற்றுக்கான ஆதாரங்களின் குறைபாடும் ஒரு காரணம்.


             வரலாற்று ஆதாரங்களில் உள்ள போதாமைகள் நடுநிலையான, சரியான வரலாற்றை அடைவதற்குத் தடைகளாக உள்ளன. இவ்வாறான போதாமை நேமிநாத நூலின் வரலாற்றைக் கண்டடைவதிலும் நிலவுகிறது.

            ஒரு நூலின் வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்களுள் முக்கியமானது அந்நூலின் சிறப்புப் பாயிரமாகும். முற்காலத்தில் எந்த நூலாக இருந்தாலும் அதற்குப் பாயிரம் என்பது அவசியமான உள்ளடக்கங்களுள் ஒன்றாக இருந்தது. பாயிரம் உரைத்தே நூல் உரைக்க வேண்டும் என்பதும் பாயிரம் இல்லாதது பனுவல் அன்று என்பதும் அக்கால இலக்கணிகளின் கொள்கை. பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

           பொதுப்பாயிரம் என்பது ஒருநூலின் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கை பற்றியதாகும். ஆசிரியன் இயல்பு, பாடம் கற்பித்தலின் இயல்பு, மாணவன் இயல்பு, மாணவன் பாடம் கேட்கும் இயல்பு ஆகிய மரபுகளை உள்ளடக்கியது பொதுப்பாயிரம் ஆகும்¹.

           பொதுப்பாயிரம் எல்லா நூலிலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என நேமிநாதப் பாயிர உரை கூறுகிறது. ஆனால் நேமிநாதத்தில் அது இல்லை.

            சிறப்புப்பாயிரம் என்பது ஒரு நூல் பற்றிய அடிப்படையான தகவல்களின் தொகுப்பு எனலாம். இதில் இன்னின்ன தகவல்கள் இடம்பெற வேண்டும் என்று இடைக்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்கள் சில வரையறுத்துக் கூறியுள்ளன.

            சிறப்புப்பாயிரத்தின் வளர்ச்சியே தற்சிறப்புப் பாயிரம் ஆகும். தெய்வ வணக்கம், நூல் நுவலும் பொருள் ஆகியவற்றைக் கூறுவது தற்சிறப்புப்பாயிரம் என்பது யாப்பருங்கலக் காரிகை உரைகாரர் கருத்து². நூலாசிரியரே சிறப்புப் பாயிரமும் செய்தாரெனில் அதுவே தற்சிறப்புப்பாயிரம் என்பது தற்காலத்தவர் கருத்து³.

           அப்படியானால், சிறப்புப்பாயிரம் செய்வோர் யார் என்னும் கேள்வி எழுகிறது. நூல் இயற்றுபவனே சிறப்புப்பாயிரமும் இயற்றுவது தக்கதன்று. நூலாசிரியனது ஆசிரியன், நூலாசிரியனோடு உடன் பயின்றவன், நூலாசிரியனின் மாணவன் என்னும் மூவரில் ஒருவர் நூலுக்குச் சிறப்புப்பாயிரம் பாடுவதே முறை என்பார் இளம்பூரணர்⁴.

            இதற்கு மாறாக - நேமிநாத உரையாசிரியர் கருத்துப்படி – நேமிநாதத்தின் சிறப்புப்பாயிரம் அதன் ஆசிரியர் குணவீர பண்டிதராலேயே பாடப்பட்டிருக்கிறது. ஆக, நூலாசிரியனும் சிறப்புப்பாயிரம் பாடலாம் என்பதும் நூலாசிரியன் பாடுவதும் சிறப்புப்பாயிரம் என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டது என்பதும் புலனாகின்றன.

             நேமிநாதத்தில் சிறப்புப்பாயிரம் என்ற வகையில் நான்கு வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள் எழுத்ததிகாரத்திற்கு இரண்டும் சொல்லதிகாரத்திற்கு இரண்டும் உரியன.

             நூலின் முன்பகுதியில் அதிகாரத்திற்கு ஒன்றாக இரண்டு வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச்சங்கப் பதிப்பைப் பின்பற்றிய பதிப்புகள்தாம் இவற்றைச் சிறப்புப்பாயிர வெண்பாக்கள் என்கின்றன. நயநப்ப முதலியார் பதிப்பில் இவ்வெண்பாக்கள் அந்தந்த அதிகாரங்களின் இறுதியிலேயே அமைந்துள்ளன.

             கேரளப் பல்கலைக் கழகக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள 6361a (வரிசை எண் 116) என்னும் சுவடியிலும் சொல்லதிகார வெண்பாவைச் சிறப்புப்பாயிரம் எனக் குறிப்பிட்டதாகத் தகவல் இல்லை; இறுதியில் இடம்பெற்றுள்ளதாகவே யூகிக்க முடிகிறது.  எனவே, இவற்றைச் சிறப்புப் பாயிரங்கள் எனச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றே படுகிறது.

             எழுத்ததிகாரம் பற்றிய வெண்பா பிற சூத்திரங்களைப் போல தன்மையிடத்திலிருந்து முன்னிலையில் உள்ளவர்களை விளிப்பதாக அமைந்தது⁵.  எழுத்ததிகார வெண்பாவின் கருத்தை நூலாசிரியருடையதாக எடுத்துக்காட்டியுள்ளார் உரையாசிரியர். ஆனால், இதைச் சிறப்புப்பாயிரம் என்று அவர் எவ்விடத்திலும் சொல்லவில்லை.

            சொல்லதிகாரம் பற்றிய வெண்பா, நேமிநாதம் கோமிகா மற்புயனை வெல்லும் குணவீர பண்டிதருடையது என்றும் அதைத் தொல்காப்பியக் கடலில் அமைந்த சொல்லதிகாரத் தீவின் சுற்றளவை அளக்க உதவும் படகு என்பர் என்றும் கூறுகிறது⁶.

           குணவீர பண்டிதர் மிகுந்த தன்னடக்கம் உடையவர் என்பதை அவரது அவையடக்கப் பாடலால் அறியலாம். எனவே, ‘கோமிகா மற்புயனை வெல்லும் குணவீரன்’ என்று தம்மைத் தாமே அவர் புகழ்ந்துகொண்டார்  எனக் கருதுவது ஏற்புடையதாகாது.

           அதிகாரத் தொடக்கத்தில் உள்ள பாயிர வெண்பாக்கள் தன்மையில் சொல்லப்படுவன. இதுவோ படர்க்கை இடத்திற்கு உரியதாக உள்ளது. மேலும், இது உரையில் எவ்விடத்தும் குறிப்பாகக்கூடக் காட்டப்படவில்லை. எனவே, இது உரையாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டதாகலாம். நேமிநாதத்தையும் தொல்காப்பியத்தையும்  ஒப்பிட்டுக் கற்ற யாரோ ஒருவரின் விமர்சனம் இது எனலாம். இது தம் ஆசிரியர் மீதும் அவர்தம் நூலின் மீதும் தாம் கொண்ட மரியாதையை வெளிப்படுத்த உரையாசிரியர்கூட எழுதியிருக்க வாய்ப்புண்டு. எனவே, சொல்லதிகாரம் பற்றிய இவ்வெண்பாவைக் குணவீர பண்டிதர் இயற்றியிருக்க வாய்ப்பில்லை.

          தெய்வ வணக்கம், அதிகாரம் இரண்டையும் சொல்வது சிறப்புப்பாயிரம் என்கிறது அவிநயம்⁷. இதை யாப்பருங்கல விருத்தி உரையும் மேற்கோள் காட்டுகிறது⁸. தெய்வ வணக்கம், செயப்படுபொருள் ஆகியவை வெளிப்படுமாறு உரைப்பது தற்சிறப்புப்பாயிரமாகும் என வரையறுக்கிறது யாப்பருங்கலக் காரிகை உரை மேற்கோள்⁹.

            உண்மையில், இருவேறு பெயர்களால் குறிப்பிடப்படும் இவ்விரண்டு சூத்திரங்களும் உணர்த்தும் பொருண்மை ஒன்றே. கடவுளை வணங்கி எடுத்துக் கொண்ட கருத்தை அறிவிப்பது என்பதே இவை கொண்ட பொதுப்பொருளாகும். இதை இரண்டு இலக்கண நூல்கள் இருவேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. காரிகை உரை மேற்கோள் அவிநயத்தின் வளர்ச்சியாகத் தெரிகிறது.

            நேமிநாத உரையாசிரியர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரைப் போலவே அவிநயத்தை எடுத்துக்காட்டி  அதிகாரத் தொடக்க வெண்பாக்களை சிறப்புப்பாயிரம் எனக் கூறியுளார். கழகப் பதிப்பாசிரியர் கா.ர.கோவிந்தராச முதலியார் யாப்பருங்கலக் காரிகை உரை மேற்கோளைப் பின்பற்றித் தற்சிறப்புப் பாயிரம் என்கிறார்.

            நேமிநாதத்தில் பாயிரம் பற்றிய வெண்பாக்கள் இரண்டா நான்கா என்பதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. உரையாசிரியர் கருத்துப்படி இரண்டு. இரண்டும் சிறப்புப்பாயிரம் கூறுவன. கழகப் பதிப்பாசிரியர் கருத்துப்படி நான்கு. சிறப்புப்பாயிரம் இரண்டு; தற்சிறப்புப்பாயிரம் இரண்டு.  
           
            இவை இங்ஙனமிருக்க, குணவீர பண்டிதர் வச்சணந்தி மாலையில் மூன்று வெண்பாக்களில்(பொது.19,20,21) சிறப்புப்பாயிரத்திற்கு உரிய வரைவிலக்கணங்களைத் தந்துள்ளார்.

             முதல் வெண்பாவும்¹⁰ இரண்டாவது வெண்பாவும்¹¹ கூறும் இலக்கணம் சிறப்புப்பாயிரத்திற்குப் போதுமானது. மூன்றாவதில்¹² கூறப்படும் செய்திகள் இரண்டாவது வெண்பாவில் சொல்லப்பட்டவையே. அப்படியானால், இது கூறியது கூறல் என்னும் குற்றமாகுமா? என்றால், அப்படியன்று. ஒவ்வொரு வெண்பாவும் சிறப்புப் பாயிரத்தின் இரண்டிரண்டு வகைமாதிரிகளைக் காட்டுவனவாக உள்ளன. இவற்றிலிருந்து சிறப்புப் பாயிரத்திற்கு 6 வகையான வரைவிலக்கணங்களைப் பெறலாம்.

Dr. N. ARULMURUGAN

1. கடவுளை வாழ்த்தி நூலின் அதிகாரம் பற்றி அறிவித்தல்.

2. கடவுள் வணக்கம் இல்லாமல் அதிகாரம் பற்றி மட்டும் அறிவித்தல்.

3. நூலாசிரியன் பெயர், நூலின் வழி, எல்லை, யாப்பு, போக்கு, கற்றல் – கற்பித்தல் நடைபெறும் இடம், கற்றோர், நூலின் பயன் ஆகிய எட்டும் வெளிப்படக் கூறுதல்.

4. மேற்கூறிய எட்டோடு நூலின் காலம், நூல் அரங்கேறிய இடம், நூல் தோன்றக் காரணம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துதல்.

5. நூலின் பெயர், நூலாசிரியன் பெயர், நூல் தோன்றக் காரணம், அதன் பயன், அதன் அளவு, ஆகியவற்றைச் சொல்லுதல்.

6. இவற்றுள் ஒருசில வேறுபட உரத்தல்.

மேற்கூறியவற்றுள் நேமிநாதத்தில் எவையெவை பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இனி ஆராயலாம்.

             நேமிநாதத்தில் உள்ள எழுத்ததிகாரத் தொடக்க வெண்பாவும்¹³ சொல்லதிகாரத் தொடக்க வெண்பாவும்¹⁴ தெய்வத்தை வணங்கி அதிகாரத்தை அறிவிக்கின்றன. எனவே, இவை சிறப்புப்பாயிரம் பற்றிய முதல் வரைவிலக்கணப்படி அமைந்துள்ளன.

            நூலின் முன்பகுதியில் உள்ள எழுத்ததிகாரம் பற்றிய வெண்பா எழுத்து ஏழு வகையாய் உணர்த்தப்படுவதாகக் கூறுகிறது. ஆகவே, இது இரண்டாவது   வரைவிலக்கணப்படி அமைந்துள்ளது.

           நூலின் முன்பகுதியில் உள்ள சொல்லதிகாரம் பற்றிய வெண்பா நூலின் பெயர், நூலசிரியர் பெயர் ஆகியவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. ‘தொல்காப்பியக் கடலின் சொற்றீபச் சுற்றளக்க’ என நூல் தோன்றக் காரணமும், பயனும் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், தொல்காப்பியச் சொல்லதிகாரம் ‘தீவு’, நேமிநாதம் ‘படகு’ என்பதால் நூலின் அளவும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வெண்பா சிறப்புப் பாயிரம் பற்றிய ஐந்தாவது மற்றும் ஆறாவது வரைவிலக்கணங்களைப் பூர்த்திசெய்வதாக அமைந்துள்ளது. இவ்வரைவிலக்கணங்களைத் தரும் மூன்றாவது வெண்பாவே நேமிநாத உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

           தென்மயிலாபுரிக் கடவுள் நேமிநாதர், களந்தை வச்சணந்தி முனிவரின் கொள்கையில் வழுவாதவர் குணவீர பண்டிதர் என்னும் இரண்டு கூடுதல் செய்திகள் நேமிநாத உரையால் தெரியவருகின்றன. இவை நூலின் பெயர்க்காரணம், நூலாசிரியரின் ஊர், நூலாசிரியரின் ஆசிரியர் பெயர் என்பவற்றைத் தெரிவிக்கின்றனவே அன்றி சிறப்புப்பாயிர இலக்கணத்திற்கு உதவுவனவாக இல்லை. இவ்வகையில், வச்சணந்திமாலை குறிப்பிடும் சிறப்புப் பாயிர வரைவிலக்கணங்கள் மூன்றும் நான்கும் நேமிநாதத்தில் நிறைவேறவில்லை.

            சிறப்புப் பாயிர வரைவிலக்கணங்கள் மூன்றும் நான்கும் ஒரு நூலின் வரலாற்றை அறிய உதவும் முக்கியமான தரவுகளை வேண்டிநிற்பனவாகும். நேமிநாதத்தின் சிறப்புப்பாயிரம் ஒரு நூலின் வரலாற்றை அறியப் பேரளவில் உதவிசெய்வதான தகவல்கள் அடங்கியதாக இல்லாதிருப்பது நேமிநாத வரலாற்றைக் கண்டடையும் வழியை அடைத்துவிடுவதாக உள்ளது. இதனால்  யூகங்களின் அடிப்படையில் புனைவுகள் கட்டமைக்கப்பட  ஏதுவாகிறது.

            தொல்காப்பியம் நிலந்தருதிருவிற் பாண்டியனையும் வீரசோழியம்  வீர ராசேந்திர சோழனையும் நன்னூல் சீயகங்கனையும் நம்பியகப்பொருள் உரை பாண்டியன் குலசேகரனையும் குறிப்பிட்டுள்ளன. இறையனார் களவியல் உரைக்கு பாண்டிக்கோவை உள்ளது. யாப்பருங்கலம் மற்றும் காரிகைக்கு கண்டன் மாதவன் பற்றிய கல்வெட்டு கிடைத்துள்ளது. அவிநயத்திற்கு இராச பவித்திரப் பல்லவன் உரை எழுதியதாகத் தெரிகிறது. ஆனால் இதுபோன்ற  திட்டவட்டமான  அரசப்பின்னணி பற்றிய தகவல் நேமிநாதத்திற்கு இல்லை.

             இதனால், நேமிநாதத்தின் எல்லை, கற்றல் – கற்பித்தல் நடைபெற்ற இடம்,  அதைக் கற்றோர், நூலின் காலம், அது அரங்கேறிய அவை ஆகிய செய்திகள் நேமிநாதப் பாயிரத்திலும் உரையிலும் விடுபட்டுப்போயுள்ளன.

             தன்னை ஆதரித்த அல்லது தான் வாழ்ந்த நாட்டின் அரசனைச் சுட்டிக்காட்டி, பேரரசுகளைப் பின்னணியாக வைத்து நிறைவுசெய்யப்படும் இத்தகவல்கள் அடங்கிய வழக்கமான சிறப்புப் பாயிரம் நேமிநாதத்தில் இல்லை என்பது இதனால் தெளிவாகிறது. இதற்குப் பின்வருவனவற்றுள் சிலவோ பலவோ காரணங்களாக அமைய நியாயமிருக்கிறது.

1. நேமிநாதம் பேரரசு தோன்றுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது.

2. நேமிநாதம் தோன்றிய காலத்தில் நாட்டில் அரசியல் குழப்பம் நிலவியது.

3. நேமிநாதம் எழுதப்பட்டபோது பேரரசு ஆட்சிப் பொறுப்பில் இல்லை.

4. பேரரசு ஒருபுறம் ஆட்சியில் இருந்தாலும் நூல் தோன்றிய இடம் பேரரசின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

5. நேமிநாதம் அரங்கேறிய இடம் நிச்சயமாகப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டதல்ல.

6. சமண சமயத்தை அழித்தொழிக்க முனைந்த ஒரு சமயத்தை ஆட்சியாளர்கள் ஆதரித்ததுடன் பின்பற்றவும் செய்தார்கள். அதாவது ஆட்சியாளர்கள் சமணத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள்.

7. விரிந்த அளவில் பரவியிருந்த சமண சமயத்தவர் ஒடுக்கப்பட்டு, குகைகளில் தஞ்சமடைந்து வாழும்படித் தள்ளப்பட்டிருந்த நெருக்கடியான காலகட்டத்தில் நேமிநாதம் தோன்றியது.

8. அரசியல் உலகிலிருந்து சமணம் துண்டிக்கப்பட்டிருந்தது.

9. நூல் சமண முனிவர்கள் மத்தியில் நிலவியதால் சிறப்புப் பாயிரத்திலும் பற்றற்ற தன்மை வெளிப்பட்டிருக்கிறது.

10. பேரரசுகளுள் எதன் துணையும் இன்றி ஓர் ஆசிரியனின் பேருதவியால் நேமிநாதம் எழுதப்பட்டது.

             தாம் முன்வைத்த வரையரையைத் தாமே நிறைவேற்ற இயலாத சூழலில் குணவீர பண்டிதர் இருந்திருக்கிறார். தாம் உரைவரைய எடுத்துக்கொண்ட நூலாசிரியனின் வரையறையை நிறைவுசெய்ய இயலாத நிலையில் உரையாசிரியரும் இருந்திருக்கிறார். அரசியல் உலகத்தால் அன்றிக் கல்வி உலகத்தால், ஆட்சியாளர்களால் அன்றிக் கல்வியாளர்களால் நேமிநாதம் ஆதரிக்கப்பட்டிருக்கிறது; பரவலாக்கப்பட்டிருக்கிறது; காப்பாற்றப்பட்டிருக்கிறது.

             மேற்கண்டவற்றிலிருந்து நேமிநாதத்தின் பாயிரம் பற்றிக் கீழ்க்காண்பவை பெறப்படுகின்றன.  

1. நேமிநாதத்தின் உரை பொதுப்பாயிரம் பற்றிக் குறிப்பிட்டாலும் பனுவலில் அது இல்லை.

2. பாயிரம் என்னும் வகையில் நேமிநாதம் கொண்டுள்ள வெண்பாக்கள் இரண்டு என்பது உரையாசிரியர் கருத்து; நான்கு என்பது பதிப்பாசிரியர்களின் கருத்து.

3. சிறப்புப்பாயிரம் எனப் பிற பதிப்பாசிரியர்கள் குறிப்பிடும் இரண்டு வெண்பாக்களும் அவர்களுக்கு முந்தைய நயநப்ப முதலியார் பதிப்பில் அதிகாரங்களின் இறுதியில் அமைந்துள்ளன. ஓலைச்சுவடியும் இதையே முன்மொழிந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இவற்றைச் சிறப்புப்பாயிரம் எனக் கூறுவதற்கில்லை.

4. சிறப்புப்பாயிரம் என உரையாசிரியர் குறிப்பிடும் இரண்டு வெண்பாக்களையும் தற்சிறப்புப்பாயிரம் என்கிறார் கழகப் பதிப்பாசிரியர். இவ்விடத்தில் நேமிநாத உரையாசிரியர் யாப்பருங்கல விருத்தி உரையாசிரியரைப் போலவே அவிநயத்தைப் பின்பற்றியிருக்க, கழகப் பதிப்பாசிரியரோ யாப்பருங்கலக் காரிகை உரையைப் பின்பற்றியுள்ளார்.

5. நேமிநாதத்தின் சிறப்புப்பாயிரம் பாடியவர் நூலாசிரியரான குணவீர பண்டிதரே. இது சிறப்புப்பாயிரம் பாடுதற்குரியோரை வரையறுக்கும் இளம்பூரணர் கருத்துக்கு மாறானது.

6. நேமிநாத உரையில்  சிறப்புப்பாயிர வரைவிலக்கணம் கூறும் வச்சணந்தி மாலையின் வெண்பா ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது. எனவே, வச்சணந்தி மாலைக்குப் பின்னர் எழுந்தது நேமிநாத உரை.

7. நேமிநாதத்தை எழுதியவர் குணவீர பண்டிதர் என்பதற்கு ஒரே ஒரு வெண்பாவில்தான் சான்று உள்ளது. ஆனால், அப்படியொரு வெண்பா இருப்பதாகவோ அது நூலாசிரியருடையதுதான் என்பதாகவோ உரையில் எவ்விடத்தும் காட்டப்படவில்லை. எனவே, இது உரையாசிரியருடையதாக இருக்க வாய்ப்புள்ளது.

8. குணவீர பண்டிதர் வச்சணந்தி முனிவரின் கொள்கைவழி நிற்பவர் என்பதற்கு  நேமிநாதத்தில் குறிப்பு இல்லை. சிறப்புப்பாயிர உரையால்தான் இது தெரியவருகிறது.

9. நேமிநாதத்தின் சிறப்புப்பாயிர வெண்பாக்கள் வச்சணந்திமாலை கூறும் வரைவிலக்கணங்கள் அனைத்தையும் நிறைவுசெய்வனவாக இல்லை.

10. நேமிநாத உருவாக்கத்தில் எந்தப் பேரரசின் நிழலும் விழவில்லை. இதனால், ஒரு பேரரசின் பின்னணியில்தான் ஒரு நூல் உருவாக முடியும் என்னும் வழக்கமான அனுமான மரபு உடைபடுகிறது.

11. நேமிநாதத்தின் சிறப்புப்பாயிர வெண்பாக்கள் நூலின் வரலாறு எழுதுவதற்குப் போதுமானவையாக இல்லை.

            மொத்தத்தில் குணவீர பண்டிதர் தாம் சொன்னதைச் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், முழுமையாகச் செய்யவில்லை. இதை வைத்து, சொல்வேறு செயல்வேறு உடையவர் குணவீர பண்டிதர் எனச் சட்டென்று முடிவுகட்டுவது அபத்தமாகும்.

            இலக்கண ஆசிரியன் ஒருவன் தான் கூறும் வரைவிலக்கணங்கள் அனைத்துக்குமான இலக்கியத்தை, அதற்கான சூழல் வாய்க்காத நிலையில், தனது நூலுள் கொண்டுவர இயலாது. இவ்வாறு நூலாசிரியன் தனது இலக்கணத்திற்குத் தானே நியாயம் செய்ய முடியாதுபோவது பிற்காலத்தவர்க்குப் பேரிழப்பாக முடிகிறது. இதனால் ஏற்படும் முட்டுப்பாடுகளே நூலின் வரலாற்றை எழுதுவதிலும் எதிரொலிக்கிறது. இதைச் சரியாக உள்வாங்காமல் எழுதப்படும் குழப்பமான இலக்கிய இலக்கண வரலாறுகள் நம்பகத்தன்மைக்குச் சவால்விடும் வகையில் அமைந்துவிடுகின்றன. இதுவரை வந்துள்ள நேமிநாத இலக்கண வரலாற்றுக் கணிப்புகள் அனைத்தும் இப்படிப்பட்டவைதாம்.

அடிக்குறிப்புகள்

1. ஈவோன் றன்மை ஈத லியற்கை
    கொள்வோன் றன்மை கோடன் மரபென
    ஈரிரண்டென்ப பொதுவின் தொகையே     நேமி. பா. உரை மேற்கோள் ப.21

2. யாப்பருங்கலக்காரிகை  ப.12, ச.திருஞானசம்பந்தம் உரை, சூன் 2007. முதல் பதிப்பு, திருவையாறு: கதிர் பதிப்பகம்.

3. ச.திருஞானசம்பந்தம் உரை, மேலது ப.9

4. நூல்செய்தான் பாயிரம் செய்வான் அல்லன்…. பாயிரம் செய்வார் தன் ஆசிரியனும், தன்னோடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன்மாணாக்கனும் என மூவகையர்.
                     – உரைக்கொத்து, இளம்பூரணர், தொல்.பாயிர உரை ப.96

5. எண்ணும் பெயரும் முறையும் இயன்றதற்பின்
    நண்ணிவரு மாத்திரையு நற்பிறப்பும் – கண்ணா
    வடிவும் புணர்ச்சியும் ஆயவோர் ஏழும்
    கடியமரும் கூந்தலாய் காண்                                                           (எழுத்து)

6. தொல்காப்பியக் கடலின் சொற்றீபச் சுற்றளக்கப்
    பல்காற்கொண் டோடும் படகென்ப – பல்கோட்டுக்
   கோமிகா மற்புயனை வெல்லும் குணவீர
   நேமிநா தத்தி னெறி                                 (சொல்)

7. வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச்
    சிறப்பென்னும் பாயிரமாஞ் சீர்                         அவி.109

8. யாப்பருங்கல விருத்தி ப.16

9. தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
    எய்த உரைப்பது தற்சிறப் பாகும்                                         யா.கா.உரை மே.ப.12

10. கண்ணாய தெய்வ மிறைஞ்சிக் கருதுநூல்
      பண்ண அதிகாரம் பாரித்தல் – எண்ணும்
      மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா
     அதிகார முஞ்சிறப்பென் றாக்கு                 வ.மா. பொது.19

11. ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்
      போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் – தாக்கியவிவ்
       எட்டினொடுங் காலங் களங்கா ரணமியம்பப்
      பட்டாலு மப்பெயரே பன்னு                     வ.மா. பொது.20

12. பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
     துன்னும் பயனளவுஞ் சொல்லினும் – முன்னைச்
      சிறப்பா மவற்றுட் சிலவேறி நாலும்
      பெறப்படுமா முன்னைப் பெயர்                   வ.மா.பொது.21

13. பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்
      நாவினால் நாளும் நவின்றேத்தி – மேவுமுடி
      பெல்லா முணர எழுத்தின் இலக்கணத்தைச்
      சொல்லால் உரைப்பன் தொகுத்து                                        நேமி. பாயிரம்(எ)

14. தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
      போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் – பேதாய்
      விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
      தெரித்துரைப்பன் சொல்லின் திறம்                                    நேமி. பாயிரம்(சொல்)

துணைமை ஆதாரங்கள்

1. நேமிநாதம். 2004. முதல் பதிப்பு, (ப.ஆ.) ச. சீனிவாசனார், சென்னை:          
     வெற்றியரசி பதிப்பகம்.
2. நேமிநாதம்  1923. இரண்டாம் பதிப்பு(முதல் பதிப்பு 1903), (ப.ஆ.)                    
    இரா. இராகவையங்கார்,  மதுரை: தமிழ்ச்சங்கம்.
3. யாப்பருங்கலக்காரிகை சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
4. யாப்பருங்கலக்காரிகை  ச.திருஞானசம்பந்தம் உரை, சூன் 2007. முதல்  
    பதிப்பு, திருவையாறு: கதிர் பதிப்பகம்.
5. யாப்பருங்கலம் விருத்தி இரண்டு பகுதிகள், 2001. முதல் பதிப்பு (ப.ஆ.)        
    ச. பவானந்தம்பிள்ளை, சென்னை: எம். தேன்மொழி.
6. வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த
   பாட்டியலும், நவ.1964. மறு அச்சு(முதல் பதிப்பு டிச.1936), சென்னை :
   சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
7. வெண்பாப் பாட்டியல், திசம்பர் 2005. முதல் பதிப்பு, இரா. கண்ணன்(ப.ஆ.),
    சென்னை: அப்பர் பதிப்பகம்.
8. நன்னூல் காண்டிகையுரை எழுத்ததிகாரம் மறுபதிப்பு சூலை 2000, கழக
   வெளியீடு
9. தமிழ் இலக்கணப் பேரகராதி  தொகுதி 16, தி.வே. கோபாலையர்,  முதல்
    பதிப்பு 2004, சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா, உங்களின் நேமிநாத ஆய்வு நூலாக வரவேண்டும்.
    ஆய்வு நடையை, பாரதி சொன்னதுபோல, “ஓரிரண்டு வருஷத்து நூல்பழக்கமுள்ள சாதாரணத் தமிழர்களுக்கும் புரியும வகையில்” எழுதினால் கூடுதலாகச் சென்று சேரும் என்பது என் கருத்து. ஆய்வாளர்களுக்காகவே எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதில் நான் தலையிட முடியாது. இலக்கண ஆய்வாளர் பெருமக்களுக்கு இக்கட்டுரை பேருவகையைத் தரும் என்பது உறுதி. பழந்தமிழ் இலக்கிய - இலக்கண ஆய்வுகள் அருகிவரும் இந்நாள்களில் உங்களின் பணி தொடரவேண்டும். நன்றி அய்யா.

    ReplyDelete
  3. அய்யா,
    நேமிநாதம் குறித்து விரிவாக அறிய ஆவலைத் தூண்டும் ஒரு கட்டுரை.

    வழக்கம்போல் ஒரு ஆழமான கட்டுரை...

    ReplyDelete
  4. நேமிநாதம் குறித்து விரிவாக அறிய ஆவலைத் தூண்டும் ஒரு கட்டுரை.
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. ஐயா வணக்கம். நேமிநாத நூலின் பாயிரம் பற்றிய ஆய்வுக் கட்டுரை மிக அருமை. அதிலும் தாங்கள் நான்கு பாயிர நூற்பாக்கள் கொண்டு நேமிநாத நூல் எழுந்த சூழல்குறித்து விளக்கியுள்ளது மிக அற்புதம். ஓர் ஆய்வு எப்படி அமையவேண்டும் என்பதற்கு ஒரு பதம். அறிஞர் தமிழண்ணல் ஐயா அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு ஏடாக அமைந்து பின்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட "தமிழில் பாயிரங்கள்" எனும் நூலை மேலும் வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா
    ஒரு நூலில் விடயங்களைப் படிப்பவர்கள் அறுகி விட்ட காலத்தில் நேமிநாதம் பற்றிய தங்களது ஆய்வுகள் வியக்க வைக்கிறது. பாயிரங்கள் பற்றி அலசியதோடு மட்டுமல்லாமல் படிப்பவர்களுக்கு பல புதிய தகவல்களைத் தந்துள்ளது இந்த பகிர்வு. ஆம் ஐயா தாம் படித்ததை அப்படி உண்மையென கண்மூடி ஏற்றுக் கொள்ளும் வாசகர்கள் தான் அதிகம் பகுத்தறிவதில்லை எனும் தங்கள் போன்ற ஆய்வாளர்களின் குறையை இப்பதிவு போக்கியிருக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்